மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி! மாநில ஹைகோர்ட் கடும் கண்டனம்
திருவனந்தபுரம்: தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டியது ஏன் என்றும் மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் 6 இடங்களில் மருத்துவக் கழிவுகளை கேரள அரசு கொட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கேரள அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை நடுக்கல்லூரி, கோடக்நல்லூர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் புற்றுநோய் மருத்துவமனையின் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகர், பேட்டையைச் சேர்நத மாயாண்டி, சேலம் ஓமலூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்லதுரை, கேரள கழிவு மேலாண்மை அலுவலர் நிதிஷ் ஜார்ஜ் ஆகியோரை கைது செய்தனர்.
இதனிடையே மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து நெல்லையில் 6 இடங்களில் கொட்டப்பட்ட கேரளக் கழிவுகளை அகற்றும் பணிகள் நேற்று காலை முதல் தொடங்கியது.
திருவனந்தபுரம் சார் ஆட்சியர் சாச்சி, கேரள சுகாதாரத் துறை அலுவலர் கோபகுமார் உள்ளிட்டோர் தலைமையிலான அதிகாரிகள் நெல்லை வந்து தமிழக அதிகாரிகள் முன்னிலையில் இந்த கழிவுகளை அகற்றி வருகிறார்கள்.
பழுவூர், பாரதி நகர், கொண்டாநகரம், இலந்தைகுளம், கோடகநல்லூர், நடுக்கல்லூர் ஆகிய 6 இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றி 16 லாரிகளில் ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின. இது தொடர்பாக கேரளாவில் மருத்துவக் கழிவை அகற்றும் 3 நிறுவனங்களுக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டியது ஏன் என்றும் மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை இன்றைக்குள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில் கேரள உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது. நெல்லையில் அபாயகரமான மருத்துவக் கழிவுகளை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளதாக வாதம் முன் வைக்கப்பட்டது.
மருத்துவக் கழிவுகள், உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், வீட்டுக் கழிவு பொருட்கள் உள்ளிட்டவை மூட்டை மூட்டையாக கட்டப்பட்டு நெல்லையில் கோடகநல்லூர் பகுதிகளில் வீசிவிடுவார்கள். அவற்றை தீவைத்து எரிப்பார்கள். ஆனால் கடந்த 3 வாரங்களாக பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக மருத்துவக் கழிவுகளை எரிக்காமல் லாரி டிரைவர்கள் அப்படியே போட்டு சென்றனர்.
6 டன் கேரள மருத்துவக் கழிவுகளை திடியூரில் மர்ம நபர்கள் கொட்டிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். இவர்கள் மருத்துவக் கழிவுகளை கொட்டிவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதனால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் போவோர் வருவோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications