"பெண்ணின் உடல் அமைப்பு அழகாக இருக்கிறது" என கூறினாலும் பாலியல் குற்றமே: கேரள ஹைகோர்ட்
திருவனந்தபுரம்: பெண்ணின் உடலமைப்பு குறித்து விமர்சிப்பது, பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. இந்த உத்தரவானது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.
பெண்ணை ஒரு முறை பின்தொடர்வது துன்புறுத்தலின் கீழ் வராது என்றும், தொடர் செயலுக்கு தான் அந்த பிரிவை பயன்படுத்த வேண்டும் என்றும் மும்பை ஹைகோர்ட் வழக்கு ஒன்றில் 2 தினங்களுக்கு முன்பு அறிவுறுத்தியிருந்தது.

அதாவது மைனர் பெண்ணின் வாயை பொத்தி, தகாத இடங்களில் தொட்டு, இளைஞர் ஒருவர் தொல்லை தந்திருந்தார்.. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு இதில் தீர்ப்பு தரப்பட்டது.
உபகரணங்கள்: அதில் நீதிபதி தன்னுடைய உத்தரவில் கூறும்போது, "இந்த வழக்கில் ஒரே ஒரு முறை மட்டுமே குற்றவாளி சிறுமியை பின் தொடர்ந்ததால், அது துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வராது. நேரடியாகவோ அல்லது, டிஜிட்டல் உபகரணங்கள் வாயிலாகவோ துன்புறுத்தியதற்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே இந்த சட்டப் பிரிவு பொருந்தும்" என்று கூறி வழக்கிலிருந்து அந்த பிரிவை நீக்கினார். நீதிபதியின் இந்த உத்தரவானது, பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், பெண்ணின் உடல் அமைப்பு குறித்து விமர்சிப்பது, பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும் என்று கேரளா ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
மோசமான வார்த்தை: கேரள மின்சார வாரியத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், அங்கு ஏற்கனவே பணிபுரிந்த ஊழியர் ஒருவர் மீது போலீசில் பாலியல் புகார் தந்திருந்தார்.. அந்த புகாரில், "கடந்த 2013 முதல், முன்னாள் ஊழியர் என் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார். அப்போது மோசமான வார்த்தைகளை சொல்லி, இந்த பாலியல் தாக்குதல் நடத்தினார். பிறகு, 2016 - 17ல் செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பியும், ஆபாசமாக பேசியும் எனக்கு பாலியல் தொல்லை தந்தார்" என்று அந்த பெண் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அந்த நபர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது... இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, கேரள ஹைகோர்ட்டில், முன்னாள் ஊழியர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 6ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விமர்சனங்கள்: அப்போது, முன்னாள் ஊழியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஒரு பெண்ணின் அழகை விமர்சிப்பது, ஐபிசி பிரிவு 154 A மற்றும் 509ன்படி சட்டப்படி குற்றமாகாது. இது, பாலியல் ரீதியான விமர்சனமாகக் கருத முடியாது என்று வாதிட்டார்.
இதையடுத்து, பெண் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், "தவறான நோக்கத்திலேயே பெண்ணுக்கு மெசேஜ்கள் அனுப்பப்பட்டன" என்று வாதாடினார்.
தண்டனைகள்: இந்த 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'ஒரு பெண்ணின் உடல் அமைப்பு குறித்து விமர்சிப்பது, பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும்... ஒரு பெண்ணின் உடலமைப்பு "நன்றாக இருக்கிறது" என்று சொன்னாலும் அதுவும் பாலியல் துன்புறுத்தலின் கீழ் வரும். இந்த வழக்கின் உண்மைத் தன்மையை பார்க்கும்போது, பெண்ணுக்கு அனுப்பப்பட்ட மெசேஜ்கள் பாலியல் ரீதியாக இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications