சிகப்பு ரோஜா பட பாணி.. கேரளா நரபலி கொலையாளிகளின் வீட்டை சுற்றி மஞ்சள் செடி.. போலீஸாருக்கு பகீர்!
திருவனந்தபுரம்: கேரள நரபலி சம்பவத்தில் நரபலி கொடுக்கப்பட்டவர்களின் உடல் புதைக்கப்பட்டு அதன் மேல் மஞ்சள் செடி நடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பகவந்த் சிங் வீட்டை சுற்றிலும் மஞ்சள் செடி இருப்பதால் நிறைய உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் எலாந்தூர் கிராமத்தில் கடவந்தரா பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின் (50). இவர் லாட்டரி சீட்டு விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரை போல் தமிழகத்தின் தருமபுரியை சேர்ந்தவர் பத்மா (52). இவரும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் இவர்கள் இருவருமே ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காணாமல் போயினர். இதையடுத்து இவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் இவர்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட தகவல் வெளியானது.

திருவல்லா
இதையடுத்து திருவல்லா பகுதியை சேர்ந்த மசாஜ் சிகிச்சையாளர் பகவந்த் சிங், அவரது மனைவி லைலா, மந்திரவாதி முகமது ஷபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பகீர் தகவல்களை அளித்தனர். இரு பெண்களையும் நிர்வாணமாக்கி பூஜை செய்து அவர்களது மார்பகங்களை அறுத்து கொலை செய்துள்ளனர்.

மர்ம உறுப்பு
மேலும் அவர்களின் மர்ம உறுப்பை சிதைத்து துன்புறுத்தியுள்ளனர். இவர்கள் மூவரிடம் தனித்தனியே நடத்தப்பட்ட விசாரணையில் முகமது ஷபி பெண்களை துன்புறுத்தி அதன் மூலம் இன்பம் காண்பவர் என தெரியவந்தது. பேஸ்புக்கில் ஸ்ரீதேவி என்ற பெயரில் நிறைய பெண்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதும் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

12 நாட்களுக்கு போலீஸ் காவல்
இந்த நிலையில் அவர்கள் மூவரும் 12 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். அவர்களிடம் கொலையை எப்படி நிகழ்த்தினர் என்பதை நடித்துக் காட்ட போலீஸார் கூறினர். அது போல் மூவரும் எப்படி அந்த இரு பெண்களை கொலை செய்தனர் என்பதை கூறிய போது போலீஸாருக்கு திகிலூட்டும் விதமாக இருந்தது. இவர்களுக்கு டம்மியான ஆளுயர உடல் கொடுக்கப்பட்டு அதை வைத்து அந்த மூவரும் நடித்து காட்டினர்.

10 கிலோ மனித மாமிசம்
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 10 கிலோ மனித மாமிசத்தை பிரிட்ஜில் போட்டு வைத்திருந்தனர். உள்ளுறுப்புகளையும் பிரிட்ஜில் சேமித்து வைத்திருந்தனராம். இவர்கள் தேவைப்படும் போது அந்த மாமிசத்தை எடுத்து குக்கரில் வைத்து சமைத்து சாப்பிட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர்கள் நரபலி கொடுத்ததும் பத்மா, ரோஸ்லின் ஆகியோரின் உடல்களின் மீதமுள்ள பாகங்களை குழித்தோண்டி புதைத்துள்ளனர். அப்போது அந்த குழியின் மீது மஞ்சள் செடியை நட்டு வைத்துள்ளனர். இதை கேட்டதும் போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவர்களது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வீடு முழுக்க மஞ்சள் செடி இருந்தது. இதனால் நிறைய பேரை கொன்று அந்த சமாதியின் மீது மஞ்சள் செடியை நட்டிருக்கலாம் என்பதால் மஞ்சள் செடி உள்ள இடங்களை தோண்டி பார்க்க போலீஸார் முடிவு செய்தனர். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல்ஹாசன் பெண்களை கொன்று அந்த சமாதியின் மேல் ரோஜா பூ வைப்பது போல் இந்த சம்பவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications