திருவனந்தபுரத்தை விடுங்க.. பாலக்காடு நகராட்சியிலும் காவி கொடி.. பாஜக ஹாட்ரிக் வெற்றி
பாலக்காடு: இந்தியாவில் பாஜக தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியாத மாநிலங்களாக தமிழ்நாடு மற்றும் கேரளா இருந்தன. இந்த இரண்டு மாநிலங்களில் தீவிரமாக கால் பதிக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. தமிழ்நாட்டில் பெரியளவுக்கு ரிசல்ட் இல்லாவிடினும் கேரளாவில் பாஜக கை ஓங்க தொடங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிவில் கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தை பாஜக கைப்பற்றியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு சத்தமே இல்லாமல் பாஜக பாலக்காடு நகராட்சியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் - பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது. டிசம்பர் 9, 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

கேரளா உள்ளாட்சி தேர்தல்
தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக, தற்போது திருவனந்தபுரத்தில் வாகை சூடி கவனம் ஈர்த்துள்ளது.
திருவனந்தபுரத்தில் பாஜக வென்றது பேசு பொருளாகியுள்ளது. அதேநேரத்தில் சத்தமே இல்லாமல் பாஜக மற்றொரு சம்பவம் செய்துள்ளது. பாலக்காடு நகராட்சியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நகராட்சியில் தங்களின் நிர்வாகத்தை தக்க வைத்துள்ளது. இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் பாலக்காடு முடிவுகளை உற்று நோக்கியிருந்தனர். பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பாலக்காடு நகராட்சியிலும் பாஜக
பாஜக பாலக்காட்டில் அதை தீவிர பிரச்சாரமாக முன் வைத்தது. அதனால் மாநிலம் முழுவதும் பரவிய காங்கிரஸ் அலை, பாலக்காட்டில் எடுபடவில்லை. மொத்தமுள்ள 53 வார்டுகளில் 25 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 2 சீட்கள் குறைவாக இருந்தாலும், அதிக வார்டுகளில் வென்ற கட்சி நகராட்சியை நிர்வாகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. பாலக்காடு நகராட்சியில் யூடிஎஃப் 17 வார்டுகளிலும், எல்டிஎஃப் 8 வார்டுகளிலும், மற்றவர்கள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
யூடிஎஃப், எல்டிஎஃப் பரஸ்பரம் இணைந்தால் மட்டுமே பாலக்காடு நகராட்சியில் பாஜக ஆட்சியை தடுக்க முடியும். ஆனால் கேரளா அரசியலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் நேர் எதிர் அரசியலில் உள்ளனர். இதனால் அங்கு அவர்கள் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதனால் அங்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக அரியணை ஏறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ஹாட்ரிக் வெற்றி
பாலக்காடு நகராட்சியை முதல்முறையாக பாஜக கடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றி பெற்றது. அப்போது 28 வார்டுகளில் பாஜக வென்றது. அதன் பிறகு 2020 தேர்தலிலும் பாலக்காடு நகராட்சியில் பாஜக தான் வெற்றி பெற்றது. இதேபோல இந்த தேர்தலில் பாலக்காட்டை போலவே திருபனிதுரா நகராட்சியிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் இந்த வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலில் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று அந்தக் கட்சியினர் நம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications