கேரளா வயநாடு நிலச்சரிவு- பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு- 150 பேர் படுகாயம்- 700 பேரின் கதி என்ன?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123-ஆக அதிகரித்துள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சூரல்மலை, முண்டகை பகுதியில் இரவிலும் மீட்பு பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவின் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அப்பகுதியில் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வயநாடு சூரல்மலை பகுதியில் கேரளா மின்சார வாரியம் கட்டிய அணையும் நிரம்பி இருக்கிறது. இந்த அணையின் நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காட்டாற்று வெள்ளம்- நிலச்சரிவு: வயநாடு சூரல்மலை பகுதியில் இடைவிடாது கொட்டிய கனமழையால் நேற்று காலை முதலே லேசான நிலச்சரிவுகள் சில இடங்களில் ஏற்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஏராளமான வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன.
அதிகாலையில் 2 முறை நிலச்சரிவு: இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
அடுத்தடுத்த நிலச்சரிவு: அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. அட்டமலையில் இருந்து முண்டகை வரையிலான ஒரே ஒரு பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. வயநாடு சூரல்மலை நிலச்சரிவில் 500 வீடுகள் சிக்கி இருக்கின்றன. இந்த வீடுகளில் சிக்கிய 1000 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணி மும்முரம்: முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் நிலச்சரிவில் சிக்கியவர்களையும் படுகாயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கேரளாவில் கனமழை காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்ட அத்தனை பேரிடர் மீட்பு குழுக்களும் ஒட்டுமொத்தமாக சூரல்மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கேரளாவில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
107 பேர் பலி- ஹெலிகாப்டர்கள்: தற்போதைய தகவல்களின் அடிப்படையில் வயநாடு சூரல்மலை நிலச்சரிவில் சிக்கி 70 பேர் உயிரிழந்துள்ளனர். மாலை 4.30 மணியளவில் பலி எண்ணிக்கை 76 ஆக அதிகரித்தது. இதில் 24 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு இருந்தது. அதன்பிறகு மாலை 5.30 மணியளவில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது.
அதன்படி பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது. இதில் 42 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இரவு 9 மணி நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது. நள்ளிரவிலும் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சூரல்மலை, முண்டகை பகுதியில் இரவிலும் மீட்பு பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்
மேலும் 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க 500 வீடுகளில் இருந்த 700 பேரை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்காக தமிழ்நாட்டின் கோவை விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன.
கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு: மேலும் கேரளா மாநில சுகாதாரத்துறை மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளது. 8086010833, 9656938689 ஆகியவை உதவி எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.வைத்திரி, கல்பட்டா, மேப்பாடி, மனந்தவாடி மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து நிலை சுகாதாரப் பணியாளர்களும் ஏற்கனவே வரவழைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications