தங்க கடத்தல்- பாஜக- சிபிஎம் ரகசிய உறவு? கேரளா சிஎம் பினராயி விஜயனை கதறவைக்கும் அன்வர் எம்எல்ஏ!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசுக்கு மிகப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறார் சுயேட்சை எம்.எல்.ஏ.வான அன்வர். தங்கக் கடத்தல் விவகாரத்தை முன்வைத்து முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அதிரடியான குற்றச்சாட்டுகளை அன்வர் கூறி வரும் நிலையில் பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களிடம் விளக்கம் தரப் போவதாகவும் அன்வர் கூறியிருப்பது கேரளா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா சுயேட்சை எம்.எல்.ஏ. அன்வர், தொழிலதிபர். இடதுசாரி கட்சிகள் அன்வரை ஆதரித்தன. ஆனால் கடந்த ஒரு மாதமாக அன்வர், ஆளும் சிபிஎம் அரசுக்கு பேரிடியாக இருந்து வருகிறார்.

கேரளா விமான நிலையங்கள் மூலமான தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன், அவரது பிஏ சசி, ஏடிஜிபி அஜித் குமார் ஆகியோரை தொடர்புபடுத்தி அன்வர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். தங்கக் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்காமல் இருப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை ஏடிஜிபி அஜித்குமார் சந்தித்தார்; முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தலில்தான் இந்த சந்திப்பு நடந்தது; இதற்கு கை மாறாக பாஜக தலைவர்கள் மீதான சில வழக்குகளை கேரளா அரசு திரும்பப் பெற்றது என்பதும் அன்வர் எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டு. அதாவது தங்கக் கடத்தல் மூலம் பிடிபடும் தங்கத்தின் ஒரு பகுதி 'பதுக்கப்படுகிறது'; இதில் முதல்வர் பினராயி விஜயன் பிஏ சசி மற்றும் ஏடிஜிபி அஜித்குமாருக்கு தொடர்பிருக்கிறது என்கிறார் அன்வர் எம்.எல்.ஏ.
மேலும் கேரளாவில் தங்க கடத்தல் முறைகேடுகள் குறித்து நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்; இதற்காக மக்களை சந்தித்து முறையிடுவேன் எனவும் அன்வர் கூறியிருக்கிறார்.
அன்வர் எம்.எல்.ஏ.வின் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவருடனான தோழமை உறவை விலக்கிக் கொள்வதாகவும் சிபிஎம் அறிவித்தது. அன்வரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பினராயி விஜயன், இடது ஜனநாயக முன்னணியில் இருந்து வெளியேற முடிவு எடுத்துவிட்டுதான் இத்தகைய குற்றச்சாட்டுகளை அன்வர் முன்வைத்து வருகிறார். என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே அன்வர் இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என்றார். அத்துடன் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பான அன்வரின் புகார்கள் குறித்து திருவனந்தபுரத்தில் தனியே ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்துவேன் எனவும் பினராயி விஜயன் கூறியிருந்தார்.
ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸோ இதை விட்டுவிடுவதாக இல்லை. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில் அக்டோபர் 8-ந் தேதி தலைமைச் செயலகம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அதேபோல அன்வரும் இந்த பிரச்சனையை தீவிரமாக மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதிகளில் மக்களிடம் விளக்க பொதுக் கூட்டங்களை நடத்தப் போவதாகவும் என்னுடைய இந்த முயற்சி கேரளாவில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கப் போகிறது எனவும் அன்வர் மிரட்டல் விடுத்துள்ளார். கோழிக்கோட்டில் இன்று மாலை மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அன்வர் விவரிக்க இருக்கிறார். இதனால் கேரளா அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications