"எங்கே வந்து என்ன பண்ணுறீங்க" கர்நாடக போலீசாரை கைது செய்த கேரள போலீஸ்.. காரணத்தை பாருங்க!
திருவனந்தபுரம்: குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க கேரளாவுக்கு போன கர்நாடக மாநில போலீசார் 4 பேரை, கேரள போலீசார் கைது செய்த சம்பவம் இரு மாநில போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள போலீசார் எதற்காக கைது செய்தார்கள் என்ற விவரத்தை பார்க்கலாம்.
ஏதேனும் ஒரு மாநிலத்தில் குற்ற செயல்களை செய்து விட்டு தங்கள் சொந்த மாநிலங்களிலோ அல்லது பிற மாநிலங்களிலோ சில மோசடி பேர்வழிகள் பதுங்கிவிடுவதுண்டு.. கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு இப்படி வெளி மாநிலங்களில் பதுங்கிவிடும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை போலீசாரும் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கைது செய்து வருவதை அவ்வப்போது செய்திகளில் கேள்வி பட்டு இருப்போம்.

இதில் பெரிய விஷயம் எதுவும் இல்லைதான். ஆனால், கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு சென்ற நான்கு போலீசாரை கேரள மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இது இரு மாநில போலீசாருக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கேரள போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கர்நாடகாவில் பதிவான ஒரு மோசடி வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளை பிடிப்பதற்காக அம்மாநில போலீசார் கொச்சிக்கு சென்றுள்ளனர்.
இந்தக் குழுவில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று போலீசார் என மொத்தம் 4 பேர் இடம் பெற்று இருந்தனர். கிரிப்டோ கரன்சி மோசடி குற்றவாளிகளான அகில் மற்றும் நிகில் ஆகிய இருவரை பிடிக்க கொச்சி வந்த கர்நாடக போலீசார், இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவர்களை விடுவிக்க ரூ. 25 லட்சம் தருமாறு கர்நாடக போலீசார் கேட்டு இருக்கிறார்கள்.
இதில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ரூ. 1 லட்சமும் மற்றொரு நபர் 2.95 லட்சமும் கொடுத்து இருக்கிறார்களாம். ஆனால், போலீசார் கூடுதலாக பணம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், கேரள மாநில போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் கர்நாடக மாநில போலீசார் 4 பேரையும் தடுப்புக்காவலில் வைத்த கேரள போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 3.95 லட்ச ரூபாயை கைப்பற்றினர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கேரளாவுக்கு குற்றவாளிகளை பிடிக்க சென்ற இடத்தில் அம்மாநில போலீசாரால், கர்நாடக போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்தத்தும் கர்நாடக போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் கேரளாவிற்கு விரைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கேரள போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "நாங்கள் கர்நாடக மாநில போலீசாருடன் தொடர்பில் உள்ளோம்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள நான்கு போலீசாரும் என்ன நோக்கத்திற்காக கேரளா வந்தார்கள் உள்ளிட்ட விவரங்களை கோரியுள்ளோம். அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மெற்கொள்ளப்படும்" என்றார். குற்ற வழக்கில் சிக்கியவர்களை பிடிக்க போன இடத்தில் கேரள போலீசாரால் கர்நாடக போலீசார் 4 பேர் கைது செய்யப்ப்ட்ட விவகாரத்தை நெட்டிசன்களும் கடுமையாக சாடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications