ஆளுநர் ஆரிப்பிற்கு சாதகமான ஹைகோர்ட் தீர்ப்பு.. கையை பிசையும் கேரள அரசு! அடுத்த 'மூவ்' என்ன?
திருவனந்தபுரம்: கேரளாவின் 'கேரள மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின்' துணை வேந்தர் நியமனம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கெனவே மாநிலங்களின் துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு வெளிவந்துள்ளது.
முன்னதாக அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனம் செல்லாது என்று நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் தற்போது மற்றொரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.
ஆனந்தமாக நடந்துகொண்டிருந்த திருமண விழா.. திடீரென வந்த நபர்.. பறந்த சேர்கள்.. பரபரத்த கேரளா
சட்ட மசோதா
பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும். இந்நிலையில் இதே பாணியை கேரளாவும் தமிழ்நாடும் பின்பற்ற முடிவெடுத்திருந்தன. தமிழ்நாட்டை காட்டிலும் கேரளா இந்த முடிவை அமல்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் அம்மாநில சட்டப் பேரவையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்ட மசோதா இயற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ்
ஆனால், இதன் மீது ஆளுநர் தற்போது வரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இவ்வாறு இருக்கையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு புறம்பாக அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் செல்லாது என்று சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது. இதனையடுத்து மற்ற 11 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
நியமனம் செல்லாது
அதில், அனைத்து துணை வேந்தர்களும் ஏன் பதவி விலகக்கூடாது? என்று கேள்வியெழுப்பி இருந்தார். இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் மற்றொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, கேரள மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் (KUFOS) துணை வேந்தர் நியமனம் யுஜிசி விதிகளுக்கு முரணானது என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பில், KUFOS பல்கலைக்கத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள 'ரிஜி ஜானின்' நியமனம் செல்லாது என்று கூறியுள்ளது.
அமைச்சரவை
அதேபோல இவர் வேந்தராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 5-15ம் தேதி வரை சட்டப் பேரவை நடத்தி அதில் அமைச்சரவையை கூட்டி பல்கலைக்கழக வேந்தராக இனி ஆளுநர் நீடிக்க முடியாது என்கிற வகையில் அவசர சட்டம் கொண்டுவர அம்மாநில அரசு தீர்மானித்திருந்த நிலையில் தற்போது வந்துள்ள இந்த தீர்ப்பு மாநில அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முன்னதாக கேரள கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கி வந்த கலாமண்டல பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொறுப்பிலிருந்து சமீபத்தில் ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.