40 ஆண்டுகளில் முதல்முறை.. எல்லா எக்ஸிட் போல்களும் சொல்வது ஒன்றுதான்.. கேரளாவில் மீண்டும் இடதுசாரிகளே
திருவனந்தபுரம்: கேரளாவில் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக இடதுசாரிகள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று இன்று வெளியான அனைத்துக் கருத்துக்கணிப்புகளிலும் கூறப்பட்டுள்ளது.
140 இடங்களைக் கொண்ட கேரள சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் வரும் மே 2ஆம் தேதி வெளியாகவுள்ளன.
வாக்குப்பதிவுக்கு முன் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் இடதுசாரிகளே மீண்டும் வெல்வார்கள் எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
உ.பி. அரசால் சிறை-கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு சிகிச்சை அளிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு
ஏபிபி சி வோட்டர்
ஏபிபி சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இடதுசாரிகள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்றாலும், கடந்த முறை பெற்ற இடங்களைவிட(91 இடங்கள்)குறைவான இடங்களிலேயே வெல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில் இடதுசாரிகள் 71-77 இடங்களைக் கைப்பற்றுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் 62-68 இடங்களிலும் பாஜக 0-2 இடங்களிலும் வெல்வார்கள் என ஏபிபி சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது
இந்தியா டுடே-ஆக்ஸிஸ் மை இந்தியா
இந்தியா டுடே-ஆக்ஸிஸ் மை இந்தியா, நியூஸ் 24- டுடே சாணக்கியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் இடதுசாரிகள் 100+ இடங்களில் வெல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே-ஆக்ஸிஸ் மை இந்தியாவின் கருத்துக்கணிப்பில் இடதுசாரிகள் 104-120 இடங்களிலும், காங்கிரஸ்+ 0-36 இடங்களிலும், பாஜக 0-2 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 24- டுடே சாணக்கியா கருத்துக்கணிப்பில் இடதுசாரிகள் 102, காங்கிரஸ்+ 35, பாஜக மூன்று இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரிபப்ளிக் டிவி
அதேநேரம் P-MARQ நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் இடதுசாரிகள் 72-79 இடங்களிலும், காங்கிரஸ்+ 60-66 இடங்களிலும் பாஜக 0-3 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் இடதுசாரிகள் 72-80, காங்கிரஸ் + 58-64, பாஜக 1-5 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
சராசரி இடங்கள்
ஒட்டுமொத்தமாக இந்த ஐந்து எக்ஸிட் போல்களும் சராசரியாக இடதுசாரிகள் 85 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன. அதேபோல காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் 53 சீட்டுகளில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக 2 இடங்களில் வெல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2016இல் இடதுசாரிகள் 91 இடங்களிலும் காங்கிரஸ் 47 இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தன.
மாபெரும் சாதனை
கேரளாவில் கடந்த 40 ஆண்டுகளாக இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சியை அமைத்துள்ளன. அதனால் இம்முறை காங்கிரஸ் வெல்லலாம் எனத் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பினராயி விஜயன் கேரளாவில் மீண்டும் வென்று அரியணை ஏறுவார் என்றே இதுவரை வெளியான அனைத்துக் கருத்துக்கணிப்புகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.