வயநாட்டில் 4 மணி நேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகள்.. காரணம் என்ன?
திருவனந்தபுரம்: வயநாடு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே அதிகாலையில் அங்கே என்ன நடந்தது.. பாதிப்புகள் இந்தளவுக்கு மோசமாக என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களாகவே கேரளாவில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கோழிக்கோடு, வயநாடு, மல்லாபுரம், திருச்சூர், எர்ணாகுளம் எனப் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இந்த கனமழையால் இன்று அதிகாலை திடீரென வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இன்று காலை வயநாடு கண் விழித்த போதே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவால் கிராமங்கள் மண்ணில் புதைந்துள்ளன.. சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகள்: இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், சூலூரில் இருந்தும் 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அங்குள்ள ஒரே பாலமும் நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிக்கல்: சூரல்மாலா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அதேநேரம் பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சென்றடைய இருந்த ஒரே பாலம் அடித்துச் செல்லப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கே பாதிப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது துல்லியமாகத் தெரியவில்லை. இப்போது ஹெலிகாப்டர் மூலமாக மட்டுமே அங்குச் செல்ல முடியும் என்ற சூழலே இருக்கிறது. மீட்புப் பணிகளில் உதவ சூலூரில் இருந்தும் ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன.
3 முறை நிலச்சரிவு: அங்கு இன்று காலை ஒன்று இல்லை.. இரண்டு இல்லை.. மொத்தம் 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே பாதிப்பு இவ்வளவு மோசமாக ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை வெறும் 4 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
"ரொம்பவே அரிய நிகழ்வு.." வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு.. வெதர்மேன் சொன்ன முக்கியமான பாயிண்ட்
இந்தச் சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்கள் அணுக முடியாத நிலையிலேயே இருக்கிறது. இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரல்மாலா கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மீட்புப் பணிகள்: மேப்பாடி, வைத்திரி, வடுவாஞ்சல் உள்ளிட்ட பகுதிகள் புவியியல் ரீதியாக மிக எளிதாகப் பாதிக்கப்படும் பகுதிகளாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு பெய்த கனமழை நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சில மணி நேரங்களில் பல இடங்களில் 300 மிமீ வரை மழை பெய்துள்ளது. இதனால் முன்பு வெுறும் 8 மீட்டர் அகலம் மட்டுமே இருந்த சூரல்மாலா ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணிகளை விரைவுபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications