"பாம்"னு சொன்னது ஒரு குத்தமா! ஏர்போர்ட்டில் தவறாக வந்த ஒற்றை வார்த்தை! இப்போ கம்பி எண்ணும் முதியவர்
திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்தில் முதியவரின் செயல் ஏர்போர்ட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.
விமான நிலையங்களில் எப்போதுமே உச்சக்கட்ட பாதுகாப்பு இருக்கும். பலகட்ட சோதனைக்குப் பின்னரே பயணிகள் விமானத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
அதிலும் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், உலகெங்கும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகப்படுத்தப்பட்டது.

விமான நிலையம்
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய கறுப்பு நாளாக இரட்டை கோபுர தாக்குதல் தினம் கருதப்படுகிறது. அமெரிக்க மண்ணில் நடந்த மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலாக அது பார்க்கப்படுகிறது. அந்தத் தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பின்னரே உலகெங்கும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டன. இந்தியாவிலும் கூட அதே நிலை தான்!

கேரளா
விமான நிலையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் மட்டுமில்லை, சில வார்த்தைகளைச் சொன்னாலே அது குற்றமாகவே கருதப்படும். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்ஐஆர் திரைப்படத்தில் கூட இது குறித்து விளக்கப்பட்டு இருக்கும். அப்படி தான் கொச்சி விமான நிலையத்தில், 63 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோதனை
கடந்த சனிக்கிழமை அதிகாலை கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு 63 வயது முதியவர் மற்றும் அவரது மனைவி வந்துள்ளனர். வெளிநாடு செல்லவிருந்த தம்பதியினர் அதிகாலை 1.30 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்து இருந்தனர். அப்போது அனைத்து பயணிகளைப் போலவே, இந்த முதியவரின் லக்கேஜிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. அப்போது செக்-இன் கவுன்டரில் இருந்த அதிகாரி, அவரிடம் உள்ளே என்ன இருக்கிறது எனக் கேட்டுள்ளார்.

பரபரப்பு
இந்த கேள்வியால் கடுப்பான அந்த முதியவர், வெடிகுண்டு என்று பதில் அளித்துள்ளார். அந்த முதியவரின் ஒற்றை சொல்லால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் வந்து முதியவரின் உடைமைகளை முழுவதுமாக சோதனை செய்துள்ளனர்.

கைது
அதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், விமான நிலையத்தில் தேவையின்றி பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக அந்த முதியவர் கைது செய்யப்பட்டு, நெடுவாசல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பின்னர் அந்த நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications