ஆஹா.. சிலிர்க்குது.. சொந்த செலவில் ஏழை மாணவர்களுக்கு வீடு.. அசத்தும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர்
திருவனந்தபுரம்: கேரளாவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் தனது ஏழை எளிய மாணவர்களுக்கு வீடுகளை தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்து அசத்தி வருகிறார். தற்போது இவர் 7வது வீட்டை கட்டி வருகிறார்.
கடந்த 2017ம் ஆண்டு கேரளாவில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை வந்த முகமது முஸ்தபா ஒரு நாள் தனது மாணவி ஒருவரிடம் வீட்டுப்பாடம் எழுதாமல் ஏன் வந்தாய் என்று விசாரித்திருக்கிறார். அப்போது மாணவி கூறிய விஷயங்கள் இவரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவிக்கு பெற்றோர்கள் கிடையாது. இவரது உறவினர் வீட்டில்தான் வளர்ந்து வருகிறார்.
ஆனால் மாணவி தங்கியுள்ள வீடு கூரை வீடு. நேற்று பெய்த மழை காரணமாக தண்ணீர் வீட்டில் ஒழுகியதால் அதனை சரி செய்யவே நேரம் சரியாக இருந்திருக்கிறது. எனவே அன்றிரவு வீட்டுபாடம் எழுதவில்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து அன்று மாலை மாணவியுடன் அவர்களது வீட்டுக்கு சென்று பார்த்திருக்கிறார். வீடு மாணவி சொன்னதைபோலவே பழுதடைந்து இருந்திருக்கிறது. எனவே உடனடியாக வீட்டை பழுது பார்க்க திட்டமிட்டார்.
வீடு
ஆனால் பழுது பார்ப்பதைவிட புதியதாக வீடு கட்டுவதே சிறந்தது என்று யோசித்து தனது சம்பளத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். இவரது முயற்சியை பாராட்டிய பலரும் இவருக்கு உதவி செய்ய தொடங்கியுள்ளனர். இப்படியாக மொத்தமாக ரூ.10 லட்சம் சேர்ந்திருக்கிறது. இந்த பணத்தில் அவர் தனது முதல் வீட்டை தனது 9ம் வகுப்பு மாணவிக்காக கட்டி கொடுத்துள்ளார். இதனையடுத்து மற்ற மாணவர்களும் வீடற்ற நிலையில் இருப்பதை இவர் உணர்ந்துகொண்டார். எனவே மற்ற மாணவர்களுக்காகவும் இவர் வீடு கட்ட தொடங்கினார். தற்போது வரை சுமார் 6 வீடுகளை கட்டியுள்ளார்.
7வது வீடு
தற்போது பெற்றோரை இழந்த 2 மற்றும் 4ம் வகுப்பு பயின்று வரும் சிறுமிகளுக்கு இவர் தனது 7வது வீட்டை கட்டிக்கொண்டுள்ளார். இவருக்கு உதவியாக மாநில அரசு 'லைஃப் மிஷன்' மூலம் ரூ.4 லட்சத்தை வழங்கியுள்ளது. இந்த வீட்டை கட்டி முடிக்க சுமார் 8 லட்சம் வரை செலவாகும் என்பதால் மேலும் அதிக உதவிகளை இவர் எதிர்பார்த்திருக்கிறார். அதேபோல இந்த வீட்டை கட்டி முடிக்க முன்னாள் மாணவர்கள் உட்பட பலரும் பணமாகவும், பொருளாகவும் உதவி செய்து வருகின்றனர். இந்த உதவிகளை பெறுவதற்காக இவர் ஒரு அறக்கட்டளையையும், இந்த வீடு கட்டும் திட்டத்திற்கு 'அனுகிரஹா பவன்' என்றும் பெயர் வைத்திருக்கிறார்.
உதவி
இவருடைய அறக்கட்டளைக்கு தற்போது 10 டிரக் கிரானைட் கற்கள், 100 மூட்டை சிமென்ட் ஆகியவை கிடைத்திருக்கிறது. இருப்பினும் இன்னும் அதிகமான உதவிகள் தேவைப்படுகின்றன. எனவே இவரது முன்னாள் மாணவர்கள் மூலம் இவர் மேலும் சில உதவிகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இது குறித்து ஆசிரியர் முஸ்தபா கூறுகையில், "ஒரு நல்ல ஆசிரியர் தனது மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்பவர்களாக இருக்க வேண்டும். எனக்கு பார்வை திறன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனது மாணவர்களின் சிரமங்களை புரிந்துகொள்வதில் நான் தோல்வியடைந்துவிடக் கூடாது" என்று கூறியுள்ளார்.
நல்லாசிரியர்
இவர் இந்த திட்டங்களை தொடங்குவதற்கு முன்னரே கடந்த 2012ம் ஆண்டு மாநில அரசின் நல்லாசிரியல் விருதை வென்றிருக்கிறார். இவரது பணியை சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல் கட்சியினரும் வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்த பணி தொடரும் என்றும், தன்னால் முந்தவரை வீடற்ற ஏழைகளுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பேன் எனவும் ஆசிரியர் முஸ்தபா கூறியுள்ளார்.