கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்- கோழிக்கோட்டில் 'கொரோனா' கால ஊரடங்கு அமல்- கல்வி நிறுவனங்கள் மூடல்!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு மனித உயிர்களை பலி கொள்வதால் பெரும் அச்சம் நிலவுகிறது. கேரளா, புதுச்சேரியில் நிபா பாதிப்பில் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். புதியதாக கேரளாவில் நிபா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நிபா வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். இதனையத்து கேரளா முழுவதும் உஷார்படுத்தப்பட்டது.

கோழிக்கோடு மாவட்டத்தில் அடுத்த 10 நாட்களுக்கு கொரோனா கால ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாடக் கூடாது; கோவில் திருவிழாக்கள், தேவாலய நிகழ்வுகள் என அனைத்து பொது வழிபாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவிட்டன.
கோழிக்கோட்டில் 7 கிராம பஞ்சாயத்துகள், கட்டுப்பாட்டு மையங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி மூலம் கைகளை கழுவ வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்கள் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைய வேண்டாம் என மாநில முதல்வ பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் சுகாதாரத்துறைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் குழுக்கள் கேரளாவில் முகாமிட்டுள்ளன. கோழிக்கோடு சென்ற இக்குழுவினர் நிபா வைரஸ் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். அதேபோல சென்னையில் இருந்தும் தொற்று நோயியல் வல்லுநர் குழு கேரளா செல்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications