கேரளாவில் 2-வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை- 34 பேருக்கு மட்டும் சிகிச்சை
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 2-வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இங்கு 34 பேருக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கேரளாவில்தான் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தாக்குதலை வெகுவாக குறைத்திருக்கிறது கேரளா.
நாடு முழுவதும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42533 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 1373 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவைப் பொறுத்தவரையில் கொரோனாவுக்கு 499 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 461 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 4 பேர் மரணமடைந்தனர். தற்போது 34 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா.. 3550 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு
2-வது நாளாக பாதிப்பு இல்லை
இந்நிலையில் கேரளாவில் இன்று 2-வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் பினராயி விஜயன் இதனை இன்று தெரிவித்தார். இச்சந்திப்பில் முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
புதிய ஹாட்ஸ்பாட் இல்லை
கேரளாவில் மொத்தம் 84 ஹாட்ஸ்பாட் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் இன்று புதியதாக எந்த பகுதியும் சேர்க்கப்படவில்லை. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து 1.65 லட்சம் பேர் கேரளாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் கர்நாடகாவில் இருந்துதான் அதிக எண்ணிக்கையில் கேரளா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு ரயில்கள்
பிற மாநிலங்களில் இருந்து 28,272 பேர் அனுமதி பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 5470 பேருக்கு அனுமதி பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 515 பேர் கேரளா வந்துள்ளனர். தொழிலாளர்கள் பயணம் செய்வதற்காக மாநிலங்களிடையேயான ரயில்களை இயக்க கேரளா ஏற்பாடு செய்துள்ளது.
84 பேர் மரணத்துக்கு இரங்கல்
பிற மாநிலங்களில் தவிக்கும் கேரளா தொழிலாளர்களை இந்த ரயில்கள் அழைத்து வரும். கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 80 கேரளா மாநிலத்தவர் மரணமடைந்துள்ளனர். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.