அதிர்ச்சி.. ராகுல் நடைப்பயணத்தில் பிக்பாக்கெட்.. பின்னணியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள்? போலீஸ் அலர்ட்
திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பிக்பாக்கெட் சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் பின்னணியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாக போலீசார் சந்தேகிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தொண்டர்களை ஒருங்கிணைக்கவும், இந்தியாவில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் தான் சரியான கட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல்காந்தி துவங்கி உள்ளார்.
இந்த நடைப்பயணமானது கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறுகிறது.

கேரளாவில் நடைப்பயணம்
கடந்த 7 ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து இந்த பாதயாத்திரை துவங்கியது. முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி நடைப்பயணத்தை துவக்கி வைத்தார். அதன்பிறகு 4 நாட்கள் வரை தமிழகத்தில் நடைப்பயணம் நடந்தது. அதன்பிறகு ராகுல்காந்தியின் நடைப்பயணம் கேரளாவை அடைந்தது.

உற்சாக வரவேற்பு
கேரளாவில் கடந்த 11ம் தேதி முதல் நடைப்பயணம் துவங்கி நடந்து வருகிறது. இன்று 3வது நாளாக கேரளாவில் உள்ள கனியாபுரத்தில் இருந்து ராகுல்காந்தி நடைப்பயணத்தை துவங்கினார். ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனகள். பெண்கள், சிறுவர், சிறுமிகள் என அனைவரும் அவருடன் கைக்கோர்த்து நடைப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிக்பாக்கெட்
இந்நிலையில் தான் ராகுல்காந்தியின் நடைப்பயணத்தில் பிக்பாக்கெட் அடிக்கும் கும்பல் நுழைந்துள்ளதாக கேரளா போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர். அதாவது நேற்று கேரளாவின் நிமோம் பகுதியில் உள்ள வெள்ளாயானி சந்திப்பில் இருந்து பட்டோம் வரை நடைப்பயணம் நடந்தது. இந்த வேளையில் 2 பேரிடம் பிக்பாக்கெட்டுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.

4 பேர் மீது சந்தேகம்
மேலும் ராகுல்காந்தியின் நடைப்பயணத்தை கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.
இதுபற்றி திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் தரப்பில், ‛‛பாரத் ஜோடோ யாத்திரையில் நுழைந்துள்ள பிக்பாக்கெட் நபர்கள் கைது செய்யப்படுவார்கள்'' என கூறப்பட்டுள்ளது. மேலும் பிக்பாக்கெட் செய்யும் காட்சிகளை போலீசார் சேகரித்துள்ளனர். அதோடு பிக்பாக்கெட் நபர்கள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

சாதாரண உடையில் கண்காணிப்பு
பிக்பாக்கெட் செய்யும் நபர்கள் என சந்தேகப்படுபவர்கள் இதற்கு முன்பும் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும், அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் ராகுல்காந்தியை பார்க்க வந்து குவியும் மக்களை குறிவைத்து அவர்களிடம் பிக்பாக்கெட் செய்வதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் கேரளாவில் பிக்பாக்கெட்டுகளை கண்காணிக்கும் நோக்கில் சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு செய்ய முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications