"இந்தியாவை பிளவுபடுத்துவதே அவர்கள் பிளான்!" மீண்டும் ஆர்எஸ்எஸை தொடும் ராகுல் காந்தி! ஆவேச பேச்சு
திருவனந்தபுரம்: கேரளாவில் இப்போது பாத யாத்திரை சென்றுள்ள ராகுல் காந்தி, அங்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸை மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.
2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் வகையில் ராகுல் காந்தி பாத யாத்திரை சென்று வருகிறார். இது காங்கிரஸ் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
கடந்த செப். 31ஆம் தேதி இந்தப் பாத யாத்திரையைக் கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சில நாட்கள் தமிழ்நாட்டில் ராகுல் காந்தி நடைப்பயணம் செய்தார்.

பாத யாத்திரை
மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பேரணி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நிறைவடைகிறது. தமிழ்நாட்டைத்தொடர்ந்து கேரளாவில் ராகுல் காந்தி இப்போது நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த யாத்திரை ஆரம்பித்தது முதல், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நல்ல எழுச்சி ஏற்பட்டு உள்ளதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்,

ராகுல் காந்தி
காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்பதால் அங்கு அதிக நாட்கள் அவர் பாத யாத்திரை செல்கிறார். அவருடன் பல காங்கிரஸ் மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் நடைப்பயணம் சென்று கொண்டு இருந்தனர். கேரளாவில் காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசிய ராகுல் காந்தி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறையைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டினார்.

வெறுப்பு பிரசாரம்
நாட்டைப் பிரிக்கும் அவர்களின் சித்தாந்தத்தைக் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தெரிவித்த அவர் வெறுப்பு உணர்வு கொள்கைகளைப் பின்பற்றினால் நாடு ஒருபோதும் முன்னேறாது என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளை வெறுப்பு பிரசாரம் தீர்க்கும் என்று நினைக்கிறீர்களா? பிளவுபட்ட சமூகத்தால் மருத்துவமனைகள், சாலைகள், கல்வியைக் கொடுக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சாத்தியமில்லை
வெறுப்புப் பாதையில் சென்றால், இந்தியாவால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பது சாத்தியமில்லை. நாட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொண்டு பாத யாத்திரையில் இணைகிறார்கள். இந்த நாடு சாமானிய மக்களால்தான் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆனால், இன்று பரப்பப்படும் வெறுப்பு உணர்வுக்குச் சாதாரண மக்கள் தான் விலையைக் கொடுக்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் மீது அட்டாக்
உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் இருந்தும், நம் மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக விலை கொடுப்பது ஏன்? ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சித்தாந்தத்தம் இந்த நாட்டைப் பிளவுபடுத்த முயல்கிறது. இருப்பினும், அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கோடிக்கணக்கான இந்தியர்கள் வேலையின்றி தவிக்கும் இந்தியாவை ஏற்க மாட்டோம். அத்தியாவசியப் பொருட்களுக்கான அதிக விலை கொடுக்கும் நிலையை மாற்ற வேண்டும்.

ஒரு சிலர் மட்டுமே லாபம்
இன்று, இந்தியா முழுவதும் கோபம், வன்முறை மற்றும் வெறுப்பு நிறைந்துள்ளது. பாஜக இந்த வெறுப்பையும் வன்முறையையும் பரப்புகிறது. இது அவர்களின் டிஎன்ஏவில் உள்ளது.. இதன் விளைவாக ஒரு சிலர் பேர் கோடிக் கணக்கில் லாபம் ஈட்டுகின்றனர்" என்று கடுமையாகச் சாடினார்.












Click it and Unblock the Notifications