சபரிமலை கோவில் உரிமையை எங்களுக்கே கொடுத்தால் சரியாகிவிடும்.. ஆதிவாசிகள் புதிய போர்க்கொடி
சபரிமலை கோவிலில் ஆதிவாசிகளுக்கு உள்ள அதிகாரத்தை உரிமையை மீண்டும் வழங்க வேண்டும், என்று ஆதிவாசி மக்கள் புதிய போர் கோடி தூக்கி உள்ளனர்.
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் ஆதிவாசிகளுக்கு உள்ள அதிகாரத்தை உரிமையை மீண்டும் வழங்க வேண்டும், அப்படி செய்தால் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும் என்று ஆதிவாசி மக்கள் புதிய போர் கோடி தூக்கி உள்ளனர்.
ஆதிவாசி கோத்ர மகாசபா இந்த கோரிக்கையை வைத்துள்ளது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
எந்த பெண்ணும் கோவிலுக்குள் செல்ல முடியாத வகையில் மக்கள் அங்கு பாதுகாப்பிற்கு நின்று வருகிறார்கள். கலவரம் நடப்பதை தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நம்பூதிரிகள்
20ம் நூற்றாண்டு வரை சபரிமலையில் பூஜை செய்வது தொடங்கி கோவிலை பராமரிப்பது வரை அனைத்தையும் ஆதிவாசி மக்கள்தான் கவனித்து வந்தனர். மலையராய இன ஆதிவாசி மக்கள்தான் அங்கு வழிபாடு நடத்தி வந்தது. அதன்பின் வந்த பிராமணர்கள், அந்த உரிமையை கைப்பற்றியதாக வரலாற்று ஆவணங்கள் சொல்கிறது.
அனுமதி வழங்கப்படுவது இல்லை
கொஞ்சம் கொஞ்சமாக மலையராய மக்களுக்கு கோவில் உரிமைபறிக்கப்பட்டது. அதன்பின் மலையராய மக்கள் மொத்தமாக பூஜையை செய்யும் பணியில் இருந்தே நீக்கப்பட்டனர். மலையராய மக்கள் இருந்த சமயத்தில் அந்த கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர் என்றும் வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கிறது.
இதுவும் முக்கியம்தான்
இந்த நிலையில்தான் சபரிமலை கோவிலில் ஆதிவாசிகளுக்கு உள்ள அதிகாரத்தை உரிமையை மீண்டும் வழங்க வேண்டும், என்று ஆதிவாசி மக்கள் புதிய போர் கோடி தூக்கி உள்ளனர். ஆதிவாசி மக்கள் தங்கள் உரிமையை மீட்க கோரி மீண்டும் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். பெண்கள் உள்ளே நுழைவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியம் கோவில் உரிமையை மீண்டும் பூர்வ குடிமக்கள் கைப்பற்றுவது என்று ஆதிவாசி கோத்ர மகாசபா கூறியுள்ளது.
தானாக எல்லாம் நடக்கும்
இதற்காக போராட்டம் நடத்த போவதாக கூறியுள்ளனர். கோவில் நிர்வாகம் தங்கள் கையைவிட்டு போன பின்புதான் இப்படி பிரச்சனைகள் நடப்பதாக அவர்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். மீண்டும் தாங்கள் கோவிலை நிர்வகிக்க தொடங்கினால் பெண்கள் கோவிலுக்குள் நுழையும் பிரச்சனையும் சரியாகும் என்றுள்ளனர்.