சபரிமலை மண்டல பூஜை சீசனில் மொத்த வருவாய் ரூ9.09 கோடி! ரூ 146 கோடி வருவாய் இழப்பு!
பம்பை: சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை சீசனில் மொத்தம் ரூ9.09 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரூ146 கோடி வருவாய் இழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள், ஆன்லைன் முன்பதிவு என இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடும் நெருக்கடிக்குள்ளானது. மேலும் நாள்தோறும் அனுமதிக்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கையும் பெருமளவு குறைக்கப்பட்டது.

நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 26-ந் தேதி மண்டல பூஜை நிறைவு நாள் வரை மொத்தம் 71, 706 பக்தர்கள் மட்டுமே சன்னிதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சபரிமலையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 390 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் ஐயப்பன் கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மட்டும் 289 பேர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாள் ஒன்றுக்கான செலவு என்பது ரூ50 லட்சமாகிறது. நடப்பு ஆண்டில் மண்டலபூஜை வரை மொத்தம் ரூ9.09 கோடி மட்டும் வருவாய் கிடைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு மண்டல பூஜை சீசனில் மொத்தம் ரூ156 கோடி வருவாய் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications