எச்.ராஜா பிறந்த நாள் சோகம்: வரவேற்ற 8 பாஜகவினரிடையே அடிதடி- சட்டை கிழிப்பு- சுப.வீ போட்ட ட்வீட்!
திருப்புவனம்: தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பிறந்த நாளை முன்னிட்டு திருப்புவனம் கோவிலுக்கு சென்ற போது அவரை வரவேற்க வந்த 8 பாஜக நிர்வாகிகள் அடிதடியில் ஈடுபட்டு சட்டையை கிழித்துக் கொண்டதால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழ்நாடு பாஜகவின் மிக மூத்த தலைவர். சிவகங்கைதான் அவரது சொந்த மாவட்டம். எச்.ராஜாவின் பிறந்த நாள் செப்டம்பர் 29. இதனையொட்டி பாஜக தலைவர்கள், தொண்டர்கள் நேரிலும் சமூக வலைதளங்களிலும் எச்.ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

திருப்புவனத்தில் சிறப்பு வழிபாடு: இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மணி மந்திர விநாயகர் கோவிலில் எச்.ராஜா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டுக்கு பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக எச்.ராஜா நேற்று இரவு திருபுவனம் வருகை தந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய எச்.ராஜாவுக்கு ஒன்றிரண்டு பேர் சாலை அணிவித்தனர். இந்த மாலை மரியாதைகளை ஏற்றுக் கொண்டிருந்த போதுதான் திடீரென தகராறு ஏற்பட்டது.
எச்.ராஜா முன்பாகவே அடிதடி: பாஜகவின் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் பாலர விராஜன் இந்த சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவரது ஆதரவாளர்கள் சிலர் எச்.ராஜாவுக்கு சால்வை அணிவித்தனர். அப்போது திருப்புவனம் கிழக்கு ஒன்றிய தலைவர் மோடி பிரபாகரன் தரப்பு, எச்.ராஜா வருகை குறித்து எங்களுக்கு ஏன் உரிய தகவலைத் தெரிவிக்கவில்லை? என கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தது. எச்.ராஜாவின் முன்னிலையில்தான் இந்த வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் இருதரப்பும் எச்.ராஜா நின்றிருந்த இடத்திலேயே அடிதடியில் ஈடுபட்டு சட்டையை கிழித்து கொண்டனர்.

எச்.ராஜா அதிர்ச்சி: இதனால் அதிர்ச்சி அடைந்த எச்.ராஜா, காரில் சென்று அமர்ந்து கொண்டார். அவரது காரை மறித்தும் இந்த வாக்குவாதம் நடந்தது. இதனால் அதிருப்தியும் கோபமும் அடைந்த எச்.ராஜா, நீங்க நாகரிகமாக நடந்து கொள்ளலை.. எனக்கு அவமரியாதையாக இருக்கிறது என காரில் அமர்ந்தபடியே குமுறினார்.

எச்.ராஜாவை மிரட்டிய நிர்வாகிகள்: ஆனாலும் இதனை பொருட்படுத்தாத பாஜக நிர்வாகிகள் சிலர், நாங்க 63 பூத் கமிட்டி வைத்திருக்கிறோம்.. யார் யாரோ இடையில வந்து போறாங்க என கை நீட்டி எச்.ராஜாவிடம் மிரட்டல் தொனியில் பேசினார்கள். இனியும் அங்கிருப்பது சரியல்ல என கருதிய எச்.ராஜா காரில் புறப்பட்டுச் சென்றார். இந்த மோதலால் திருப்புவனம் மணி மந்திர விநாயகர் கோவில் பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

சுப.வீரபாண்டியன் கருத்து: எச்.ராஜா விரட்டியடிக்கப்பட்ட இச்சம்பவம் குறித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தமது எக்ஸ் பக்கத்தில், திருபுவனத்திற்கு வந்த ஹெச். ராஜாவை விரட்டி அடித்தது என்ன நியாயம், இது ஜனநாயகமா என்று ஒருவர் கோபமாய்க் கேட்டபோது அந்தக் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது - அவரை விரட்டி அடித்ததே அவருடைய கட்சிக்காரர்கள்தான் என்பது... என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications