சொல் அல்ல செயல்.. பாலின சமத்துவத்தை பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்த கேரளா இடதுசாரி அரசு!
திருவனந்தபுரம்: பாலின சமத்துவம் என வீதிக்கு வீதி.. மேடைக்கு மேடைகளில் முழங்குவதுடன் நிற்காமல் நடைமுறைப்படுத்துவதற்கான விதைகளை ஆழமாக வேரூன்றியிருப்பதால் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு வெகுவான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பாடப் புத்தகங்களிலேயே பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் படங்கள், தகவல்களை கேரளா ஆளும் இடதுசாரி அரசு இடம் பெறச் செய்திருக்கிறது.
பொதுவாக ஆண் அல்லது அப்பாவைக் குறிக்கும் போது 'ர்' (அவர்) என மரியாதை கொடுக்கப்படுவது வழக்கம். பெண் அல்லது அம்மாவைக் குறிக்கும் போது 'ள்' (அவள்) என மரியாதை மறுக்கப்படுவது நடைமுறையில் இருக்கிறது. ஆணாதிக்கச் சிந்தனையாளர்கள் உருவாக்குகிற / எழுதுகிற புத்தகங்கள்/ பாடப்புத்தகங்களிலும் இதேபோல சிந்தனைகள் இடம் பெறுவது இயல்பானதாக இருந்து வருகிறது.

நாம் இதுவரை பாடப் புத்தகங்களில் கொடுக்கப்பட்ட படங்களில் அம்மா சமைத்துக் கொண்டிருப்பார்/ அப்பா பேப்பர் படித்துக் கொண்டிருப்பார் என்கிறவைதான் இடம் பெற்றிருக்கும். ஆனால் இதனை தலைகீழாகவே புரட்டிப் போட்டிருக்கிறது கேரளாவின் கம்யூனிஸ்ட் அரசு! ஆம் கேரளா பாடப் புத்தகங்களில் அம்மா சமையலறையில் நின்று சமையல் செய்கிறார்; அப்பா கீழே அமர்ந்து தேங்காய் துருவிக் கொண்டிருக்கிறார்; இன்னொரு படத்தில் குழந்தைக்கு அம்மா தலை சீவிவிடுகிறார்; அப்பாவோ சமையல் செய்து கொண்டிருக்கிறார் என்பதாக இடம் பெற்றுள்ளது.
சமையலறை என்பது பெண்ணுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட 'தொழுவம்' கிடையாது.. ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு 'இடம்'தான் என்பதை பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சில் இப்படியான படங்களுடன் ஆழப் பதிய வைத்திருக்கிறது கேரளா அரசு. இத்தகைய பாலின சமத்துவ முயற்சியைத்தான் சமநீதி- சமூக நீதி- இயற்கை நீதி பேசுவோர் பாராட்டுகின்றனர்.
கேரளா கல்வி அமைச்சர் சிவக்குட்டி நாம் மேலே சுட்டிக்காட்டிய கருத்து படத்தை தமது சமூக வலைதளங்களில் பகிர்ந்தபோதுதான் அம்மாநில அரசின் பாலின சமத்துவ முன்னெடுப்புகள் அனைவருக்கும் தெரிந்தது. இந்த பதிவுக்குதான் பல்லாயிரக்கணக்கான பாராட்டுகள்!
ஏற்கனவே கேரளா பள்ளிகளில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் இருபாலருக்கும் ஒரே மாதிரியான சீருடையை அறிமுகப்படுத்தியது கேரளா இடதுசாரி அரசு. 60 மாணவர்கள்-200 மாணவிகளைக் கொண்ட கோழிக்கோடு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டபோது மதம் சார்ந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. ஆனாலும் குழந்தைகள்- மாணவர்கள் என்பவர்கள் குழந்தைகள்தான்.. மாணவர்கள்தான்.. அதற்கு அப்பால் அவர்களுக்கு எந்த ஒரு பாலினம், மதம், மொழி அடையாளம் இருக்கவே கூடாது எனவும் கல்வியாளர்கள் வலியுறுத்தியதுடன் கேரளா அரசின் முயற்சியைப் பாராட்டி இருந்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சமூக செயற்பாட்டாளர் ஓவியா, ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி உடை என்கிற கருத்தியலை முன்வைத்தவரே தந்தை பெரியார்தான். இதனை இனியேனும் கட்டாய சட்டமாக்குவோம் எனக் கூறியிருந்தார்.
பாலின சமத்துவத்தை சீருடை, பாடப் புத்தகங்களில் என இடைவிடாமல் வலியுறுத்துகிற கேரளா இடதுசாரி அரசாங்கத்தை நிச்சயம் பாராட்டுவதுதான் சரியானதும் நியாயமானதுமாகும். சொல் வேறு செயல் வேறாக இல்லாமல் சொல் அல்ல செயல்தான் என 'ஆதிக்க'வாதிகளின் செவுளில் அறைகிற கேரளா இடதுசாரி அரசை பாராட்டுவோம்!












Click it and Unblock the Notifications