பழனிக்கு பாதயாத்திரை வந்தவருக்கு அடித்த யோகம்! ஏழை தொழிலாளி டூ கோடீஸ்வரர்.. நொடியில் மாறிய வாழ்க்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக வந்தவருக்கு லாட்டரியில் ரூ. 1 கோடி பரிசாக கிடைத்துள்ளது. இதன் மூலம் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வந்த விருதுநகரை சேர்ந்த ஏழை தொழிலாளி ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
ஒரே நாளில் பணக்காரர் ஆக வேண்டும் என்றால் அது லாட்டரியால் மட்டுமே நடக்கும். லாட்டரியில் பணக்காரர் ஆனவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.. ஆனால், லாட்டரி மோகத்தில் கணக்கின்றி வாங்கி குவித்து பணத்தை பலரும் இழந்து இருக்கிறார்கள். இதனால்தான், தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட்டது.

லாட்டரியை தமிழ்நாட்டிற்குள் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. எனினும், நம் அண்டை மாநிலமான கேரளாவிலும், பஞ்சாப், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
பம்பர் லாட்டரி: கேரளாவில் தினந்தோறும் லாட்டரி குலுக்கல் நடந்து வருகிறது. இதேபோக வாரத்திற்கு ஒன்றும், முக்கிய பண்டிகை நாட்களிலும் குலுக்கல் நடைபெறுகிறது. தினந்தோறும் விற்பனை செய்யப்படும் லாட்டரிக்கு அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்படும். கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், பருவமழை பம்பர், ஓணம் மெகா பம்பர், பூஜா பம்பர் என பம்பர் பரிசுத்தொகை கொண்ட லாட்டரியில் முதல் பரிசாக ரூ. 25 கோடி வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஓணம் பம்பர் பரிசுத்தொகையான ரூ.25 கோடி பரிசை தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு கிடைத்தது. அதேபோல், வடமாநில தொழிலாளர்கள் சிலரையும் கேரள லாட்டரி கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளது. இப்படி திடுக்கென லாட்டரி விழுந்து ஒரே நாளில் பணக்காரர் ஆக்கி விடுகிறது. இதனால் லாட்டரி மோகம் பலருக்கும் அதிகமாகவே இருக்கும். அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது அடிக்கும் என்று யாருக்கும் தெரியாது.
பழனிக்கு பாத யாத்திரை சென்றவர்: இதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு தருணங்களில், கேரளா லாட்டரியில் அடிக்கடி பரிசு விழுவது பற்றிய பல சுவாரசியமான செய்திகள் வெளியாகி வருகிறது. கூலித்தொழிலாளி, ரிக்ஷா ஓட்டுனர், கோவிலுக்கு சென்றவர், லாட்டரி வாங்க காசு இல்லாமல் கடனாக வாங்கியவர்கள் கூட சில நேரங்களில் லட்சாதிபதியாகி விடுவதை பார்த்திருப்போம். அந்த வகையில் தான் தற்போது பழனி கோவிலுக்கு பாத யாத்திரை சென்றவருக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதுபற்றிய விவரத்தை பார்ப்போம்.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி சாந்தி நிஷா. இவர்களுக்கு பரத், ரஞ்சித் என்று இரு மகன்கள் மற்றும் மாலினி என்ற மகளும் இருக்கின்றனர். பரமசிவம் கேரளாவில் உள்ள மூணாறு குண்டளா பகுதியில் உள்ள விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், அங்கு இருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரை குழுவினர் சென்றனர்.
ரூ. 1 கோடிக்கு சொந்தக்காரர்: இந்த குழுவோடு பரமசிவமும் தனது இரு மகன்களோடு பாத யாத்திரை சென்றார். இவர்களது பாத யாத்திரை பெரியவரை என்ற இடத்திற்கு வரும் போது அங்கு இருந்த ஒரு கடையில் பரமசிவம் 50/50 லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். தொடர்ந்து அவர் பாதயாத்திரை சென்றார். இந்த நிலையில் கோவில் அருகே பரமசிவமின் பாத யாத்திரை வந்த நிலையில், அவர் வாங்கிய லாட்டரிக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்திருக்கும் தகவல் கிடைத்தது. இதனால் பரமசிவம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
கோவிலுக்கு பாத யாத்திரையாக வரும் வழியில் வாங்கிய லாட்டரிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்ததால் பரமசிவம் எல்லையில்லா ஆனந்தம் அடைந்துள்ளார். லாட்டரியில் ரூ. 1 கோடி பரிசு கிடைத்தது பற்றி பரமசிவம் கூறுகையில், முருகப்பெருமான சந்திக்க போகும் நேரத்தில் லாட்டரியில் பரிசு கிடைத்து இருப்பது முருகனின் அருள் கிடைத்ததாக கருதுகிறேன். எனக்கு சொந்தமாக வீடு இல்லை. இதனால் இந்த பணத்தை வைத்து முதலில் வீடு கட்டுவேன்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications