ஹேமா கமிட்டி அறிக்கை.. இத்தனை நாளா என்ன பண்ணீங்க? 4 வருஷம் ஆச்சு..பினராயி அரசை விளாசிய நீதிமன்றம்
திருவனந்தபுரம் : மலையாள திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? என கேரளா உயர் நீதிமன்றம் கேரளா அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் அரசின் செயலற்ற தன்மை அதிர்ச்சி அளிக்கிறது என அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.
மலையாள திரை உலகில் ஒரு 'பவர் குரூப்' ஒட்டுமொத்த திரையுலகை கட்டி ஆள்வதாகவும், நடிகைகள், பெண் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக நீண்ட காலமாகவே புகார் இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓடும் காரில் பிரபல நடிகை ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோவும் எடுக்கப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பிரபல நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் கைது செயப்பட்ட சிலர் இன்னும் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் புகாரினை தொடர்ந்து ஹேமா கமிட்டி அமைத்து அரசு உத்தரவிட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் அது வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டு அந்த அறிக்கையை வெளியான பிறகு மலையாளத் திரையுலகம் புரட்டிப் போட்டது போல ஆகிவிட்டது. பல நடிகைகளுக்கு, நடிகர்களும் ,இயக்குனர்களும் பாலியல் தொல்லை தந்தது வெளிச்சத்திற்கு வந்தது. நடிகைகள், பெண் கலைஞர்கள் தொடர்ந்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது, இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடிகர் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியண்ணன் பிள்ளை, எடவேல பாபு, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? என கேரளா உயர் நீதிமன்றம் கேரளா அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கேரளா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேமா கமிட்டி அறிக்கையை சுட்டிக்காட்டி கேரளா அரசை உயர் நீதிமன்றம் மிகக் கடுமையாக விமர்சித்தது. இந்த அறிக்கையை 2021ஆம் ஆண்டு டிஜிபி இடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசின் இந்த செயலற்ற தன்மை நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியை தருகிறது. மலையாள திரை உலகில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை அந்த அறிக்கை அப்பட்டமாக வெளிக்காட்டிய பின்பும் அரசு குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுக்கவில்லை. திரையுலகில் மட்டுமல்ல சமூகத்தில் பெண்கள் எதிர்கொண்டிருக்கும் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க என்ன வழியை அரசு செய்துள்ளது.
பெண்கள் அதிகமாக வசிக்கும் கேரளா போன்ற மாநிலத்தில் இப்படி நிலைமை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பெரும்பான்மையான மக்கள் இது போன்ற பிரச்சனை எதிர்கொள்ளும் போது நீங்கள் அமைதியாக இருப்பது ஏன்? என காரசாரமாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அரசு தரப்பில் ஹேமா கமிட்டி அறிக்கையை தற்போது அரசு அமைத்திருக்கும் சிறப்பு புலனாய்வு முழுமையாக படிக்கவில்லை என கூறப்பட்டது. "திருத்தப்படாத முழு ஹேமா கமிட்டி அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications