சர்ச்சையை கிளப்பிய 'தி கேரளா ஸ்டோரி'.. படம் பார்க்கல.. ஆனாலும்.. கேரள ஆளுநர் பரபரப்பு கருத்து
திருவனந்தபுரம்: கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், கேரளாவில் லவ் ஜிகாத் இருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கியுள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம். இந்த படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணாய் பச்செளரி, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

இந்த டீசரில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்தது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் வெளிநாடு அழைத்து செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்பட்டதாக அந்த படத்தின் டிரெய்லரில் காட்டப்பட்டு இருந்தது.
கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் தோழிகளை சக முஸ்லிம் பெண் ஒருவர் மூளைச் சலவை செய்து முஸ்லிமாக மதமாற்றம் செய்வதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் டிரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டுகளும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்த்தன.
கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த படத்தை கடுமையாக சாடி தனது பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனது.

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதனிடையே, தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கூறுகையில், மாநிலத்தில் ஏதாவது 'லவ் ஜிகாத்' சம்பவங்கள் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்.
இது குறித்து கேரள ஆளுநர் மேலும் கூறுகையில், "இந்த படத்தை நான் பார்க்கவில்லை. சட்டம் ஒழுங்கை பேணவும் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பில் உள்ளவர்களும் அதை கவனித்துக் கொள்ள வேண்டும். கேரளாவில் லவ் ஜிகாத் இருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு ஆகும்" என்றார்.












Click it and Unblock the Notifications