கேரளாவை உலுக்கும் தக்காளி காய்ச்சல்! ஒரே பள்ளியில் இத்தனை பேருக்கு பாதிப்பா? அலர்ட் செய்யும் அரசு.!
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் இடுக்கி நெடுங்கண்டம் கல்லார் எல்பி பள்ளியில் 20 மாணவர்களுக்கு தக்காளி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காய்ச்சலின் அறிகுறிகளை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளத்தில் குழந்தைகளை குறிவைத்து தக்காளி வைரஸ் என்னும் புதிய வகை வைரஸ் பரவிவருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொண்டை வலி ஏற்பட்டு, உணவு விழுங்க முடியாமல் சிரமப்படுவார்கள்.
அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா?
மேலும் தோல் பகுதிகளில் சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றும். வைரஸால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவும் தன்மை கொண்டது.
தக்காளி காய்ச்சல் பாதிப்பு
இந்நிலையில் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள நெடுங்கண்டம் கல்லார் எல்பி பள்ளியில் உள்ள எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் பயிலும் 20 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்பட்டதையடுத்து தலைமை ஆசிரியை சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சுகாதார பணியாளர்கள் குழு பள்ளிக்கு சென்று குழந்தைகளை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு தக்காளி காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
குழந்தைகளுக்கு பாதிப்பு
14 LKG குழந்தைகளுக்கும், 6 UKG குழந்தைகளுக்கும் தக்காளி காய்ச்சல் இருப்பதை சுகாதார நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் நெடுங்கண்டம் ஊராட்சியைச் சேர்ந்த 11 பேரும், பாம்பாடும் பாறை ஊராட்சியைச் சேர்ந்த 6 பேரும், கருணாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த 3 பேரும் உள்ளனர். நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் படித்து வந்த மூன்று வகுப்புகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உடல் நிலை திருப்திகரமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்.
அலட்சியம் வேண்டாம்
இதே போல் திருவனந்தபுரத்தில் நான்கு குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.தக்காளி காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் காய்ச்சலின் அறிகுறிகளை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தக்காளி காய்ச்சல், இது குழந்தைகளுக்கு மிகவும் பொதுவானது. இது வைரஸால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் பொதுவாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது.
சுகாதாரத்துறை எச்சரிக்கை
ஆனால் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் பாதிக்கிறது காலநிலை மாற்றம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடனான தொடர்பு மூலமும் பரவுகிறது. தக்காளி காய்ச்சல் வந்தால் கை, கால், வாயின் உள்பகுதியில் சிறு கொப்புளங்கள் தோன்றும். வாயில் உள்ள தோலில் அரிப்பு ஏற்படும். கால்-கை வலிப்பு மற்றும் சிறுநீரக நோய் உள்ள குழந்தைகளை தக்காளி காய்ச்சல் பாதிக்கலாம், இருப்பினும் இந்த நோய் ஒரு வாரத்தில் தானாகவே மறைந்துவிடும். அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரின் சேவையை நாட வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.