மிசா சிறைவாசம்.. 5 முறை எம்.எல்.ஏ.. 52 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை.. யார் இந்த கொடியேரி பாலகிருஷ்ணன்?
திருவனந்தபுரம் : 1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலை காலகட்டத்தின்போது 16 மாதங்கள் மிசா சிறைவாசம் அனுபவித்த கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு கேரளாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த கொடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அப்பொறுப்பில் இருந்து விலகினார்.
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய கொடியேரி பாலகிருஷ்ணனனின் மரணம், இடதுசாரி இயக்கத்தினரையும், கேரள மக்களையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொடியேரி பாலகிருஷ்ணன்
கேரள மாநிலம் மலபார் மாவட்டத்தில் உள்ள கொடியேரியில் 1953-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ஆம் தேதி பிறந்த கொடியேரி பாலகிருஷ்ணன் கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு தீவிரமாக பாடுபட்டவர். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், மாணவப் பருவத்திலேயே 1973 முதல் இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) மாநிலக் குழு செயலாளராக இருந்துள்ளார்.

மிசா சிறைவாசம்
1975-77 அவசரநிலை காலத்தில், மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் கொடியேரி பாலகிருஷ்ணன். 1979 காலகட்டத்தில் எஸ்.எஃப்.ஐ அமைப்பின் அகில இந்திய இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார் கொடியேரி பாலகிருஷ்ணன். 1980 முதல் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் (DYFI) கண்ணூர் மாவட்டத் தலைவராகவும் இருந்தார்.

5 முறை எம்.எல்.ஏ
சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினராகப் பொறுப்பு வகித்த கொடியேரி பாலகிருஷ்ணன், ஐந்து முறை சட்டமன்றத் தேர்தலில் தலச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வென்று இருபது ஆண்டுகள் கேரள சட்டசபையில் எம்.எல்.ஏவாக இருந்தவர். 2001 முதல் 2006 வரையிலும், 2011 முதல் 2016 வரையிலும் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்துள்ளார். 2006-2011 காலகட்டத்தில், அச்சுதானந்தனின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.

20 ஆண்டுகள் எம்.எல்.ஏ
மூன்று முறை கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகப் பதவி வகித்து வந்துள்ளார். 2015ஆம் ஆண்டில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளராக இருந்த அவர், கடந்த மாதம் தனது உடல்நலக் குறைவு காரணமாக ராஜினாமா செய்தார். அவர் 'தேஷாபிமானி' என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலையாள நாளிதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

52 ஆண்டுகால அரசியல் பயணம்
மாநிலக் கட்சித் தலைவராக பாலகிருஷ்ணன் பதவி வகித்த காலத்தில் சிபிஐ(எம்) தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றது. இடதுசாரி ஆதரவாளர்கள் இந்த சாதனையை பெரிதும் பாராட்டினர். கொடியேரி பாலகிருஷ்ணன் இடதுசாரி மாணவர் ஆர்வலராக இருந்து சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் வரை என 52 ஆண்டு காலம் இடதுசாரி இயக்கத்தில் பொறுப்பு வகித்துள்ளார்.கொடியேரி பாலகிருஷ்ணனின் மறைவை அடுத்து கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

துணிச்சலான தலைவர்
கொடியேரி பாலகிருஷ்ணனின் மறைவு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில்,"எனது அன்புத் தோழரும், நண்பருமான கொடியேரி பாலகிருஷ்ணனின் மறைவு என்னை நிலைகுலையச் செய்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியெழுப்பவும், ஒடுக்கப்பட்டோரை உயர்த்தவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த துணிச்சலான தலைவர். நமது போராட்டங்களில் அவர் தொடர்ந்து நம்மை ஊக்குவிப்பார். செவ்வணக்கம் காம்ரேட்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications