கேரளா: தமிழக ஆசாமியின் நூதன சீட்டிங்- நுனிநாக்கு ஆங்கிலத்தால் ஏமாந்த பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டல்கள்!
திருவனந்தபுரம்: கேரளாவில் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருப்பதிலேயே விலை அதிகமுள்ள உணவு பொருட்களை சாப்பிட்டுவிட்டு ஹோட்டலின் லேப்டாப்புடன் ஹோட்டல் கட்டணம் செலுத்தாமல் தப்பியோடிய தூத்துக்குடி இளைஞரை திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வின்சென்ட் ஜான். இவர் பார்ப்பதற்கு பெரிய இடத்து பணக்காரர் போல் இருப்பாராம். எப்போதும் இவர் போலியான ஆவணங்களை வைத்து பெரிய பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்களில் அறையை புக் செய்துவிடுவது வழக்கம்.
அது போல் பைவ் ஸ்டார் ஹோட்டலில் இருப்பதிலேயே எக்ஸிகியூட்டிவ் அறையை புக் செய்யும் இவர் அந்த ஹோட்டலில் இருக்கும் உணவு பொருட்களிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்படும் உணவைதான் விரும்பி சாப்பிடுவாராம்.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்: புதைகுழியில் இருந்து மீண்டு எழுமா காங்கிரஸ்?
மதுபானங்கள்
அது போல் அங்கு கிடைக்கும் உயர் ரக மதுபானங்களை குடிப்பதையும் வழக்கமாக கொண்டிருப்பாராம். இவ்வாறு சில நாட்கள் தங்கும் இவரிடம் ஹோட்டல் நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக கேட்டால் ஏதாவது சாக்கு போக்கு சொல்வாராம். இல்லாவிட்டால் ஹோட்டலை காலி செய்யும் போது ஒரு பைசா விடாமல் செட்டில் செய்து விடுவதாக கூறுவார்.
நுனி நாக்கில் ஆங்கிலம்
பார்ப்பதற்கு நல்லவர் போல் தெரிகிறாரே, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகிறாரே என ஹோட்டல் நிர்வாகமும் மறுப்பு சொல்லாமல் இருப்பார்களாம். இந்த நிலையில் திடீரென தனக்கு லேப்டாப் வேண்டும், தான் வைத்திருக்கும் லேப்டாப் பழுதடைந்துவிட்டது, லேப்டாப் இருந்தால்தான், நான் பணியாற்ற முடியும். அப்படியோ உங்கள் பில்லை செட்டில் செய்ய கம்பெனிக்கு மெயில் அனுப்ப முடியும் என்பாராம்.
லேப்டாப்
இதனால் நல்ல லேப்டாப்பையும் தருவார்களாம். ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் ஹோட்டல் பில்லையும் செலுத்தாமல் வாங்கிய லேப்டாப்பையும் திருப்பி கொடுக்காமல் எப்படியாவது எஸ்கேப் ஆகிவிடுவாராம். போலீஸில் புகார் கொடுத்தாலும் போலி முகவரி என்பதால் விசாரணை நடத்துவதாக போலீஸார் தெரிவித்து வந்தனர்.
கொல்லம் நட்சத்திர ஹோட்டல்
இந்த நிலையில் கொல்லத்தில் ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற வின்சென்ட் ஜான், வழக்கம் போல் காஸ்ட்லி அறையை புக் செய்துள்ளார். அது போல் இருக்கும் உணவுகளிலேயே காஸ்ட்லியான உணவையும் விலை அதிகமான மது பானத்தையும் அவர் விரும்பி ஆர்டர் செய்து உண்டுள்ளார். மேலும் தனக்கு ஒரு முக்கியமான கான்பிரன்ஸ் இருக்கிறது, லேப்டாப் கொண்டு வரவில்லை, எனவே லேப்டாப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள் என சூப்பரான ஆங்கிலத்தில் சரளமாக சொல்லியுள்ளார்.
லேப்டாப்
ஹோட்டல் நிர்வாகத்தினரும் ஒரு லேப்டாப்பை வின்சென்ட்டிற்கு அளித்துள்ளனர். சில நாட்கள் தங்கிய அவரிடம் ஹோட்டல் நிர்வாகம் குறிப்பிட்ட தொகையை கேட்டதற்கு ஆங்கிலத்தில் பேசி சமரசம் செய்துள்ளார். பின்னர் தொடர்ந்து அவர்கள் பில் கேட்டு வந்ததால் இனி இங்கு இருப்பது சரிப்பட்டு வராது என நினைத்த வின்சென்ட் அந்த இடத்தை விட்டு லேப்டாப்புடன் விடுதி கட்டணத்தை செலுத்தாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.
கைதான மோசடி மன்னன்
இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்தினர் திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் கொல்லத்தில் வைத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில்தான், பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் அறை எடுப்பது, உயர்தர உணவையும் மதுபானத்தையும் சுவைப்பது, லேப்டாப் கேட்டு வாங்குவது பிறகு பில் செலுத்தாமல் அந்த இடத்தை விட்டு தப்பி செல்வது என்பதையே வின்சென்ட் வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் வின்சென்ட் மும்பையிலும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்தது.