இறுதிக்கட்டத்தில் மீட்பு பணி.. அப்போ 206 பேரின் நிலை என்ன? 357யை தொட்ட வயநாடு நிலச்சரிவு பலி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் நம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்நிலையில் தான் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 357 யை தொட்டுள்ள நிலையில் இன்னும் 206 பேரை காணவில்லை. தற்போது 6வது நாளாக இறுதிக்கட்ட மீட்பு பணி தொடங்கி உள்ள நிலையில் 206 பேரின் நிலை என்ன? என்பது பற்றிய பெரிய கேள்வி எழுந்துள்ளது.
நம் மாநிலத்தை போல் அண்டை மாநிலமான கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த மாதம் 30ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் மலைப்பிரதேசமான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

மலைப்பிரதேசம் என்பதால் திடீரென்று அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட இடங்களில் கரைபுரண்ட வெள்ளத்தில் நிலச்சரிவில் அடித்து வரப்பட்ட மண், பாறாங்கற்கள் குடியிருப்பு பகுதிகளை மூடின. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்து போயின.
பேய் மழையின் காரணமாக சாலியார் ஆற்றில் கரைபுரண்ட வெள்ளத்தில் மக்கள் அடித்து செல்லப்பட்டனர். நள்ளிரவு நேரம் என்பதால் அவர்களுக்கு உடனடியாக உதவி என்பது கிடைக்கவில்லை. மேலும் பலரும் வெள்ளம், நிலச்சரிவில் இருந்து தப்பித்து மலைகளில் தஞ்சம் அடைந்தனர். மொத்தம் 1000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.
அதன்பிறகு 30ம் தேதி காலையில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஏராளமானவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை என்பது 350யை கடந்துள்ளது. மொத்தம் 357 பேர் வரை நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை பலியாகி உள்ளனர். இதில் 214 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்னும் 206 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இவர்களை தேடும் பணி என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி இன்று காலையில் 6வது நாளாக மீட்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் நேற்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் நிலச்சரிவு பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.
அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், ‛‛215 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 188 பேர் வயது வந்தவர்கள். அதில் 98 பேர் ஆண்கள். 90 பேர் பெண்கள். 30 பேர் 18 வயது நிரம்பாதவதவர்கள். இன்னும் 206 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிலச்சரிவில் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார். மேலும் தற்போது வயநாடு நிலச்சரிவு மீட்பு பணி என்பது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் மாயமாகி உள்ள 206 பேரை மீட்பு படையினர் கண்டுப்பிடிப்பார்களா? என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications