முதல்வர் பட பாணியில்.. சென்னையில் பள்ளி மாணவர்கள்- நடத்துனர்கள் மோதல்.. போராட்டம்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் இடையே தகராறு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. சென்னை மக்கள் இதுபோன்ற சம்பத்தை அடிக்கடி பார்த்து சலித்து விட்டார்கள்.
இந்த நிலையில் இன்று மாலை சென்னை பெரம்பூரில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி மாநகர அரசு பேருந்து(29ஏ) சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர்.
பாச்சலூர் பள்ளி மாணவி படுகொலை- சிபிஐ விசாரிக்க கொங்கு மக்கள் முன்னணி வலியுறுத்தல்
கடும் மோதல்
மேலும் ஒரு சில மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் எறியும் பயணம் செய்துள்ளனர். படிக்கட்டிலும், மேற்கூரையிலும் பயணம் செய்ய கூடாது என்று பேருந்து நடத்துனர் அவர்களிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார். சென்னை ஓட்டேரி அருகே பேருந்து வந்தபோது, மீண்டும் ஒரு முறை நடத்துனர் மாணவர்களை எச்சரித்துள்ளார். அப்போது நடத்துனருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென இது மோதலாக உருவானது.
பேருந்துகளை நிறுத்தி போராட்டம்
சில மாணவர்கள் நடத்துனரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த பேருந்து சாலையில் நிறுத்தப்பட்டது. இது பற்றிய தகவல் மற்ற ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கும் தெரிய வந்தது. இதனால் பல்வேறு ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அரசு பேருந்துகளை திடீரென சாலையில் நிறுத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்கள் நடத்துனரை தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
போலீசார் பேச்சுவார்த்தை
அரசு பேருந்துகள் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இது பற்றி தகவல் அறிந்ததும்
போலீசார் உடனடியாக விரைந்து வந்து போராட்டதில் ஈடுபடும் ஓட்டுனர்கள், நடத்துனர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த சம்பவத்தால் ஓட்டேரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னையில் மாணவர்கள், அரசு பேருந்து ஊழியர்கள் இடையே மோதல் தொடர்கதையாகி உள்ள நிலையில் இதனை தடுத்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.