தமிழ்நாட்டில் “குட்டி நயாகரா”.. அதுவும் நம்ம தருமபுரி பக்கத்துல! ஒக்கேனக்கலில் அப்படி என்ன ஸ்பெஷல்?
தருமபுரி: உலகையே பிரம்மிக்க வைக்கும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாமல் ஏங்குவோர் ஒரே ஒருமுறையாவது நமது தமிழ்நாட்டில் உள்ள குட்டி நயாகராவுக்கு சென்று வாருங்கள். அது என்ன குட்டி நயாகரா? எங்கு இருக்கிறது? விரிவாக பார்ப்போம்.
காடு, மலை, கடல், விளைநிலம், நதிகள், பள்ளத்தாக்குகள், பீடபூமிகள் என பல்வேறு வகையான நிலப்பரப்புகளை கொண்ட சுவர்க்க பூமி தமிழ்நாடு. ஆனால், நமது பூமியின் மகிமை நம் மக்களுக்கே அதிகளவில் தெரியவில்லை. எனவேதான் கேரளா, கோவா, வெளிநாடுகளில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு வியக்கிறார்கள்.

பிற மாநிலங்கள், தேசங்களில் உள்ள அழகை ரசிப்பதிலும் வியப்பதிலும் தவறில்லை. ஆனால், நமது தமிழ்நாட்டின் சிறப்புகளை அறியாமல் பிற நாடுகளை மட்டுமே சிலாகிக்கலாமா? அதனால்தான் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிகம் பிரபலமாகாத சுற்றுலா தலங்களை பற்றி நாம் பார்த்து வருகிறோம்.
எல்லோருக்குமே உலகின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சியான கனடாவில் அமைந்து உள்ள நயாகரா நீர் வீழ்ச்சி என்றாலே ஒரு வித வியப்பும், அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். ஆனால், எல்லோராலும் அங்கு செல்ல முடிவதில்லை. பொருளாதாரம் இருந்தாலும் நேரம் இல்லை, நேரம் இருந்தால் பொருளாதாரம் இல்லை என்று ஏங்குவோர் ஏராளம்.

அங்கு செல்ல ஆசைப்பட்டு முடியாதவர்கள் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இடம் நமது தமிழ்நாட்டில் உள்ளது. அதுவும் தருமபுரிக்கு அருகிலேயே.. அதுதான் ஒகேனக்கல். காவிரி ஆறு கரைபுரண்டு அருவியாக பாறைகளின் விளிம்பிலிருந்து விழும் காட்சியை ரசிப்பதே தனி சுகம்தான்.
கர்நாடகாவின் எல்லை பகுதியில் அமைந்து உள்ள இந்த ஒகேனக்கல் அருவி, குற்றாலம், தடா போன்ற அருவிகள்போல் கிடையாது. மலையின் இருபக்கமும் சூழ்ந்த காவிரி நீர் நடுவே பள்ளத்தாக்கைபோல் ஓடு நதியில் விழும் அழகை காண்பதற்கே கோடி கண்கள் வேண்டும். அவ்வளவு அழகானது அந்த காட்சி.

நயாகரா நதியும் இதேபோல்தான் அருவியாக விழும். எனவேதான் ஒகேனக்கலை குட்டி நயாகரா என்கிறோம். கர்நாடகாவிலிருந்து விடுதலை பெற்று தஞ்சாவூர் பூமியை பசுமையாக்க வரும் காவிரி தாய் முதலில் முத்தமிடும் தமிழ் மண் இந்த ஒகேனக்கல். அதன் அழகை நீங்கள் காண வேண்டாமா?
ஒகேனக்கல் என்பது கன்னட வார்த்தை. ஒகேனக்கல் என்றால் கன்னடத்தில் புகைப்பாறை என்று அர்த்தம். பாறையிலிருந்து பாய்ந்து விழும் நீர் புகைப்போல் காட்சி தருவதால் இதற்கு இப்படியொரு பெயர் வந்ததாம். அதிவேகத்தில் பாறைகளில் புரண்டு ஓடும் காவிரி நீர் பால்போல் வெண்மையான நிறத்தில் காட்சி தரும்.

இப்படி வேகமாக செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்துவதுதான் சேலத்தின் மேட்டூர் அணையாகும். பார்த்துக்கொண்டே இருந்தால் எப்படி? அந்த நம் மண்ணை பசுமையாக்கும் காவிரியாற்றில் மிதக்க வேண்டாமா? அதற்குதான் இருக்கிறது பரிசல் சவாரி. ஒக்கேனக்கலில் பரிசலில் சவாரி செய்வது மிகவும் பிரபலம். நீரின் ஓட்டத்துக்கு ஏற்ப, பிரமாண்ட பாறைகளுக்கு நடுவே குட்டி பரிசலில் குதூகலமாக பயணிக்கலாம்.
கர்நாடக மாநிலத்துக்கு சேலம் வழியாக சுற்றுலா செல்வோர் நிச்சயம் ஒக்கேனக்கலை தவற விடாதீர்கள். சேலம் விமான நிலையத்தில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் இந்த அருவி அமைந்து உள்ளது. தருமபுரி ரயில் நிலையத்தில் இருந்து ஒகேனக்கலுக்கு 48 கிமீ தொலைவாகும். தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரியிலிருந்து பேருந்து வசதிகளும் உள்ளன.













Click it and Unblock the Notifications