ஊட்டி, கொடைக்கானலை விடுங்க.. பொங்கலுக்கு மேகமலை, வாகமன், தேக்கடி போனால் இதை மிஸ் பண்ணிடாதீங்க!
தேனி: பொங்கலுக்கு ஊட்டி கொடைக்கானலுக்கு பதில் மேகமலை, வாகமன், தேக்கடி போனால், மிஸ் பண்ணக்கூடாத இடம் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள 18ம் கால்வாய் தொட்டி பாலம் ஆகும். சுருளி அருவிக்கு போய்யிட்டு கம்பம் வழியாக குமுளிக்கு மலை ஏறும் முன்பு இங்கு போய் பாருங்கள்.. அற்புதமான அனுபவமாக இருக்கும்.
பொங்கல் பண்டிகையின் போது பலரும் சுற்றுலா செல்ல விரும்புவார்கள்.. அப்படி சுற்றுலா போகிறவர்கள் என்றால் இந்த பதிவினை பாருங்கள். சிலர் பொங்கல் பண்டிகையின் போது, மூணாறு, கொடைக்கானல், வாகமன், தேக்கடி, மேகமலை என தேனி மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளில் சுற்றுலா செல்ல போகிறீர்கள் என்றால், 18ம் கால்வாய் தொட்டி பாலத்திற்கு மிஸ் பண்ணாமல் போய் பாருங்கள்.. நீங்கள் அசந்துவிடுவீர்கள்..

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் தம்மணம்பட்டி அருகே 18ம் கால்வாய் தண்ணீர் செல்லும் தொட்டிப் பாலம் அமைந்திருக்கிறது.
இயற்கை எழிலுடன் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் 40 அடி உயரத்தில் உள்ள தொட்டிப் பாலத்தில் தண்ணீர் கடந்து செல்லும். இது பார்ப்பதற்கே மிகவும் ரம்யமாக இருக்கும். இந்த தொட்டி பாலத்தை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த சில ஆண்டுகளாக வருகிறார்கள்.
தென்னை தோப்புகள் சூழ, மலையை ஒட்டிய அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பாலம் சுற்றுலா பயணிகளுக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும். இந்நிலையில தொட்டி பாலத்தில் குளிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகவே உள்ளது. அதேநேரம் இங்கு வெள்ளம் அதிகமான காலங்களில் குளிப்பது ஆபத்தானது என்பதால் குளிக்க காவல்துறையினர் அனுமதிக்க மாட்டார்கள்.
இதற்கு எப்படி போவது? குமுளி செல்லும் சாலை ( கழுதைமேடு ) ஐயப்பன் கோவில் இருந்து... வலது புரம் 1.5கி.மீ பயணிக்க வேண்டும். ஜீப்&கார் அல்லது இருசக்கர வாகனத்தில் சென்றால் உரிய இடத்தை அடைந்து விடலாம். கார்களில் செல்வோர் வாகனத்தை 1கி.மீ முன்பே நிறுத்திவிட்டு செல்வது நல்லது.
இப்போது 18-ம் கால்வாய் தண்ணீர் திறந்து விடும் நேரம் என்பதால் சென்றால் குடும்பத்துடன் குளிக்க முடியும். அதேநேரம் பெண்கள் நீச்சல் தெரியாத நபர்கள் பாலத்தின் ஓரத்தில் குளிக்கலாம். தொட்டி பாலத்தின் உள்ளே இறங்குவது ஆபத்தானது என்கிறார்கள் அந்த பகுதி மக்கள். 18ம் கால்வாய் தொட்டி பாலத்தை பொறுத்தவரை .நீச்சல் தெரிந்த நபர்களுக்கு சொர்க்கம் என்கிறார்கள். இந்த தண்ணீரில் சோப்பு & சாம்பை பயன்படுத்த வேண்டாம் என்று கூறுகிறார்கள். வாகமன், தேக்கடி, செல்வோர், முன்னதாக சுருளி அருவியில் குளித்து மகிழ்ந்துவிட்டு இங்கு வரலாம். இதேபோல் மேகமலை செல்வோரும் இங்கு வந்து மகிழ முடியும். அதேபோல் மூணாறு போய்விட்டு திரும்புவோர், நேராக கம்பம் வந்து இந்த பகுதியில் உள்ள சுருளி அருவி, 18ம் கால்வாய் தொட்டி பாலத்திற்கு போக முடியும்.












Click it and Unblock the Notifications