என்னது.. மதுரையில் “டைம் டிராவல்” போலாமா.. எப்டி எப்டி? பாண்டிய நாட்டில் வேற லெவல் ட்ரிப் - ரெடியா?
மதுரை: வார விடுமுறைகளின்போது ஒரு நாள் சுற்றுலா பயணம் செல்வதற்கு ஏற்ற பல இடங்கள் மதுரையில் அமைந்து இருக்கின்றன. அதில் உங்களை பழங்காலத்துக்கு டைம் டிராவல் செய்ய வைக்கும் ஒரு படத்தையே நாம் பார்க்க உள்ளோம்.
பாண்டிய நாடான மதுரை பல நூற்றாண்டுகால தமிழ் வரலாற்றை தாங்கி நிற்கிறது. ஊர் பெருமை பேசுவதில் உச்சத்தில் மதுரைக்காரர்கள் நின்றாலும், பேசுவதற்கு அந்த ஊரில் அத்தனை விசயங்கள் உள்ளன. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையையும், வைகையையும் சுற்றிலும் வரலாற்று எச்சங்கள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன.

மதுரை மாவட்டத்தை சுற்றிலும் ஒவ்வொரு திசையில் ஒவ்வொரு விதமான நிலப்பரப்புகளும், மன்னர்களும் உள்ளார்கள். இதற்கு மேல் வரலாற்று பாடம் எடுக்க விரும்பவில்லை. வாருங்கள் வரலாற்று உள்ளேயே பயணிக்க தயாராவோம். ஆம், மதுரையில் உள்ள அப்படி ஒரு இடத்தை பற்றிதான் தற்போது பார்க்க உள்ளோம்.
அதுதான் திருமலை நாயக்கர் மஹால். சுமார் 388 ஆண்டுகள் பழமையான இந்த அரண்மனைக்குள் செல்வதன் மூலம் 16 ஆம் நூற்றாண்டுக்கு டைம் டிராவல் செய்யலாம். மதுரையில் ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களில் திருமலை நாயக்கர் மஹாலுக்கு ஒரு தனி இடம் உள்ளது.
திராவிட மற்றும் வெளிநாட்டு கட்டிடக் கலை இணைந்து செய்த மேஜிக்கை இந்த மஹலாலில் நீங்கள் காண முடியும். இங்கு வந்துவிட்டு வீடு திரும்பும் வரலாற்று ஆர்வலகர்கள், கட்டிட பிரியர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இது பிரமிப்பையும், புதியதோர் அனுபவத்தையும் நிச்சயம் வழங்கும். மாமன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை இத்தாலிய கட்டிட கலைஞர் வடிவமைத்து உள்ளார்.

உள்ளே செல்லும்போதே அழகான ஓவியங்களும், சிற்பங்களும் உங்கள் மனதை மகிழ்விக்கும். குறிப்பாக அதன் மேற்கூரையில் உள்ள தனித்துவம் மிக்க ஓவியங்கள் உங்களை லயிக்க வைக்கும். குறிப்பாக கம்பீரமான தூண்கள் மற்றும் ஆர்சுகளின் அழகும் உங்களை மயக்க வைத்திடும். இங்குள்ள மத்திய முற்றமும் நடன அரசங்கமும் பார்வையாளர்களை வியப்பூட்டும்.
சொர்க்க விலாசம் மற்றும் ரங்க விலாசம் ஆகிய 2 பகுதிகள் இந்த அரண்மனையில் இருக்கின்றன. நீங்கள் தமிழ் சினிமாவில் வரும் வரலாற்று படங்களில் காணும் அந்தப்புரங்கள், அரண்மனை குளங்கள், மாட மாளிகைகள், தோட்டங்கள், அரச குடியிருப்புகளை பார்க்க பரவசம் அடையலாம். அந்த அளவுக்கு அது போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக நாயக்க மன்னர்களின் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வரும் சிம்மாசனத்தையும் உங்களால் காண முடியும். வட்ட வடிவத்தில் இருக்கும் நெடு வரிசைகளும், கற்விலாக்களும், காட்சிப்பேழைகளும் உங்களை மீண்டும் மீண்டும் இந்த அரண்மனைக்கு வரவழைக்கும். தற்போது தொல்லியல் துறையால் போற்றி பாதுகாக்கப்பட்டு வரும் இந்த அரண்மனைக்கு செல்லும் உங்களுக்கு மாலையில் மேலும் ஒரு போனஸ் உள்ளது.
அதுதான் ஒலியும் ஒலியும் காட்சி. அது உங்களுக்கு மதிமயக்கும் அனுபவத்தை வரவழைக்கும். திருமலை நாயக்கர் அரங்கம் செல்ல மதுரையில் இருந்து நீண்ட தூரம் எல்லாம் செல்லத் தேவையில்லை. வெளியூர்களில் இருந்து இதனை பார்க்க வேண்டும் என்பதற்காக வருபவர்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்யலாம்.

காரணம் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து வெறும் 2 கிலோ மீட்டர் தொலைவில்தான் இது அமைந்து உள்ளது. மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் பயணித்தால் திருமலை நாயக்கர் அரங்கிற்கு செல்லலாம். மதுரை விமான நிலையத்தில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மாளிகை உள்ளது.
குறிப்பு: புராதான சின்னமாக போற்றி பாதுகாக்கப்படும் இந்த மாளிகையின் சுவர்களில் கிறுக்குவது, உங்கள் பெயர்களை எழுதுவது போன்றவற்றை தவிர்த்தால் இன்னும் பல நூற்றாண்டுகள் அதன் அழகு மாறாமல் அப்படியே இருக்கும்.












Click it and Unblock the Notifications