மாலத்தீவு சீண்டுவது ஏன்? லட்சத்தீவில் 10 ஆண்டுகளில் மத்திய அரசு செய்தது என்ன? பட்டியல் போட்ட மோடி!
டெல்லி: இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா செல்லும் நாடுகளில் ஒன்று மாலத்தீவு. ஆனால் மாலத்தீவுக்கு பதிலாக தற்போது லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை 5 மடங்காக உயர்ந்துள்ளது. லட்சத்தீவு மேம்பாட்டில் மத்திய அரசு முழு வீச்சில் களமிறங்கி இருப்பதால் சுற்றுலா வருவாய் பாதிப்பு ஏற்படும் அச்சத்தில்தான் மாலத்தீவு அரசியல்வாதிகள் அலறுகின்றனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
லட்சத்தீவுக்கு அண்மையில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். லட்சத்தீவின் கவரட்டியில் ரூ.1150 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொழில்நுட்பம், எரிசக்தி, நீர்வளம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் திட்டங்கள் தொடங்கப்பட்டன.

கடல் எல்லை பகுதி: இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,"லட்சத்தீவின் நிலப்பரப்பளவு சிறியதாக இருந்தாலும், மக்களின் இதயங்கள் கடலைப் போல ஆழமாக உள்ளன" என்று கூறினார். தொலைதூர, எல்லை, கரையோர தீவுப் பகுதிகள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்படுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். "எங்கள் அரசு அத்தகைய பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளது", என்று அவர் கூறினார். உள்கட்டமைப்பு, போக்குவரத்து, நீர், சுகாதாரம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான திட்டங்களுக்காக அவர் இப்பகுதி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
லட்சத்தீவுகளின் உரிமை குரல்: லட்சத்தீவின் வளர்ச்சிக்கான அரசின் முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் (கிராமப்புறம்), ஒவ்வொரு பயனாளிக்கும் இலவச ரேஷன் கிடைப்பது, பிரதமரின் வேளாண் கடன் அட்டை திட்டம் மற்றும் ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகம், ஆயுஷ்மான் சுகாதார நலவாழ்வு மையத்தின் வளர்ச்சி குறித்து தெரிவித்தார். "அனைத்து அரசு திட்டங்களையும் அனைத்து பயனாளிக்கும் வழங்க மத்திய அரசு முயற்சிக்கிறது" என்று பிரதமர் மோடி கூறினார். பயனாளிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் பணம் வழங்கும் போது ஏற்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை குறித்து குறிப்பிட்ட பிரதமர், இது ஊழலை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளது என்றார். லட்சத்தீவு மக்களின் உரிமைகளை பறிக்க முயற்சிப்பவர்கள் எக்காரணம் கொண்டும் தப்ப முடியாது என்று அவர் உறுதியளித்தார்.
கண்ணாடி இழைகள் இணைப்பு திட்டம்: 1000 நாட்களுக்குள் விரைவான இணையத்தை உறுதி செய்வது குறித்து 2020 -ம் ஆண்டில் தான் அளித்த உத்தரவாதத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். கொச்சி-லட்சத்தீவுகள் நீர்மூழ்கி கண்ணாடி இழைகள் இணைப்பு திட்டம் இன்று மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும், இது லட்சத்தீவு மக்களுக்கு 100 மடங்கு விரைவான இணையத்தை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். இது அரசு சேவைகள், மருத்துவ சிகிச்சை, கல்வி, டிஜிட்டல் வங்கி போன்ற வசதிகளை மேம்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர் லட்சத்தீவை தளவாட மையமாக உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இதன் மூலம் வலுப்பெறும் என்று கூறினார். கட்மாட்டில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் குறைந்த வெப்ப அனல் ஆலையைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, லட்சத்தீவில் உள்ள அனைத்து வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் விரைவாக நடந்து வருவதாகக் கூறினார்.
கடல் உணவு சந்தை: உலகளாவிய கடல் உணவு சந்தையில் தனது பங்கை அதிகரிப்பதற்கான இந்தியாவின் முயற்சியை பிரதமர் எடுத்துரைத்தார், இது உள்ளூர் சூரை மீன்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் லட்சத்தீவுகளுக்கு நன்மை பயக்க வழிவகுக்கிறது என்று அவர் தெரிவித்தார். மீனவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய தரமான உள்ளூர் மீன்களை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பிரதமர் மோடி சுட்டிக் காட்டினார். கடற்பாசி வளர்ப்பின் சாத்தியக்கூறுகளை ஆராய்வது குறித்தும் அவர் தெரிவித்தார். இப்பகுதியின் பலவீனமான சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை வலியுறுத்திய அவர், லட்சத்தீவின் முதல் பேட்டரி ஆதரவு சூரிய மின் திட்டமான கவரட்டியில் உள்ள சூரிய மின் நிலையம் அத்தகைய முன்முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றார்.
சர்வதேச சுற்றுலா: விடுதலைப் பெருவிழா அமிர்த காலத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் லட்சத்தீவின் பங்கை சுட்டிக் காட்டிய பிரதமர், யூனியன் பிரதேசத்தை சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்வதற்கான அரசின் முயற்சிகளைக் குறிப்பிட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த ஜி20 மாநாட்டை குறிப்பிட்டு லட்சத்தீவுகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார். சுதேச தர்ஷன் திட்டத்தின் கீழ், லட்சத்தீவுகளுக்கு இலக்கு சார்ந்த பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். லட்சத்தீவு இரண்டு நீலக் கொடி கடற்கரைகளின் தாயகம் என்று கூறிய அவர், கட்மாத், சுஹேலி தீவுகளில் நீர் வில்லா திட்டங்களின் வளர்ச்சியைக் குறிப்பிட்டார். "லட்சத்தீவுகள் கப்பல் சுற்றுலாவின் முக்கிய இடமாக மாறி வருகிறது" என்று கூறிய பிரதமர் மோடி, சுற்றுலாப் பயணிகளின் வருகை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ள தீவு நாடுகளுக்கு செல்ல விரும்புவோர் லட்சத்தீவுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். "நீங்கள் லட்சத்தீவின் அழகைக் கண்டால், உலகின் மற்ற இடங்கள் சாதாரணமானதாகத் தோன்றும்", என்று அவர் மேலும் கூறினார். லட்சத்தீவுக்கு முன்னுரிமை: லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை வசதி, பயண வசதி, எளிதாக தொழில் தொடங்குவதை உறுதி செய்ய மத்திய அரசு தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். "வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் லட்சத்தீவு ஒரு வலுவான பங்கை வகிக்கும்" என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவுசெய்தார்.
100 மடங்கு வேக இணையம்: 2020 -ம் ஆண்டில் செங்கோட்டையில் சுதந்திர தின உரையின் போது அறிவிக்கப்பட்ட கொச்சி-லட்சத்தீவு நீர்மூழ்கி கண்ணாடி இழை இணைப்பு திட்டத்தைத் தொடங்குவதன் மூலம் லட்சத்தீவில் மெதுவான இணைய வேகத்தை அதிகரிப்பதற்கு பிரதமர் முடிவு செய்தார். தற்போது இத்திட்டம் முடிக்கப்பட்டு பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது. இது இணைய வேகத்தை 100 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் (1.7 ஜி.பி.பி.எஸ் முதல் 200 ஜி.பி.பி.எஸ் வரை). சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் மூலம் லட்சத்தீவு இணைக்கப்படும். லட்சத்தீவுகளில் விரைவான, நம்பகமான இணைய சேவைகள், தொலை மருத்துவம், மின் ஆளுமை, கல்வி முன்முயற்சிகள், டிஜிட்டல் வங்கி, டிஜிட்டல் நாணய பயன்பாடு, டிஜிட்டல் கல்வியறிவு போன்ற தகவல் தொடர்பு உள்கட்டமைப்பில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை இந்தப் பிரத்யேக நீர்மூழ்கி கப்பல் உறுதி செய்யும்.
கடல் நீரை குடிநீராக்குதல்: கட்மாத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் குறைந்த வெப்பநிலை அனல் ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் தினமும் 1.5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீர் உற்பத்தி செய்யப்படும். அகத்தி, மினிக்காய் தீவுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பவளத் தீவு என்பதால், நிலத்தடி நீர் இருப்பு குறைவாக இருப்பதால் லட்சத்தீவுகளில் குடிநீர் கிடைப்பது எப்போதுமே சவாலாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டங்கள் தீவுகளின் சுற்றுலாத் திறனை வலுப்படுத்தவும், உள்ளூர் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும்.
சூரிய மின்சக்தி திட்டம்: லட்சத்தீவின் முதல் பேட்டரி ஆதரவு சூரிய மின்சக்தி திட்டமான கவரட்டியில் உள்ள சூரிய மின் உற்பத்தி நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பிற திட்டங்களில் அடங்கும். கல்பேனியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை புனரமைப்பதற்கும், ஆண்ட்ரோத், சேத்லட், கட்மாத், அகத்தி, மினிக்காய் ஆகிய ஐந்து தீவுகளில் ஐந்து மாதிரி அங்கன்வாடி மையங்களை (நந்த் கர்ஸ்) கட்டுவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
அலறுவது ஏன்?: மத்திய அரசின் இத்தகைய லட்சத்தீவுகள் மீதான அதீதமான கவனம்தான் தற்போது மாலத்தீவு அரசியல்வாதிகளை அலற வைத்துள்ளது. மாலத்தீவுக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் இந்தியர்களே அதிகம். கடந்த 2022-ம் ஆண்டு இரண்டரை லட்சம் இந்தியர்கள் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். மாலத்தீவு செல்வதற்கு விசா தேவை இல்லை. ஆனால் லட்சத்தீவுகள் செல்வதற்கு முன் அனுமதி தேவை. லட்சத்தீவின் மொத்த மக்கள் தொகையே 64,000 பேர்தான். லட்சத்தீவு, மீன்பிடி தொழில் மற்றும் தென்னை சாகுபடியில் முக்கிய இடம் வகித்து வருகிறது. அண்மைகாலமாக லட்சத் தீவுகளுக்கு சுற்றுலா வருவாயும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை!












Click it and Unblock the Notifications