ஹே ஓட்டு.. ஓட்டு! ஹெவி ட்ராபிக்கால் ஆற்றுக்குள் தார் காரை இறக்கிய சுற்றுலா பயணி! கடைசியில் ட்விஸ்ட்
சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், போக்குவரத்து நெரிசல் காரணமாக பாலத்தை விட்டுவிட்டு, கரடுமுரடான பகுதி வழியாக ஆற்றை மகேந்திரா தார் கார் ஒன்று கடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டின் இறுதி என்றாலே விடுமுறைதான். விடுமுறை வந்துவிட்டால் ஊர் பயணம்தான். இப்படியாக நாட்டின் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் தற்போது நிரம்பி வழிகின்றன. பொதுவாக கோடை காலங்களில்தான் மலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வார்கள். ஆனால் தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காரணமாக சிம்லாவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்தது.

மலை பகுதிகளில் சாலை போக்குவரத்துக்கான வசதி அவ்வளவு சிறப்பாக ஒன்றும் இருக்காது. ஒரு பக்கம் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசல், மறுபுறம் குறுகலான பாதை என இரண்டும் சேர்ந்து, சிமலாவை ஒரு பாடு படுத்திவிட்டது. இப்படி இருக்கையில் போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க சுற்றுலா பயணி ஒருவர் தனது தார் காரை ஆற்றியல் இறக்கி மறு கரை வழியாக வெளியே கொண்டு வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகேந்திராவின் தயாரிப்புகளில் தார் அற்புதமான காராக இருக்கிறது. 4 சக்கரங்களும் சுழலும் அம்சம் கொண்ட இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 226 மிமீ. மட்டுமல்லாது பெரிய 18 இன்ச் டயர்கள் மற்றும் 4wd டிரான்ஸ்மிஷ் ஒன்று சேரும்போது 'தார்', தார் சாலையில் மட்டுமல்லாது எங்கு வேண்டுமானாலும் சீறி செல்லும். இந்த வகை கார்கள் கரடுமுரடான பாதைகளில் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணிப்பதற்காகவே தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதனை பரிசோதித்து பார்க்கும் முயற்சியில்தான் சிம்லாவில் ஓட்டுநர் ஒருவர் இறங்கியிருக்கிறார்.
அதாவது, போக்குவரத்து நெரிசல் காரணமாக தார் காரின் ஒட்டுநர் காரை சந்திரா நதியில் இறக்கியுள்ளார். இந்த நதியை கடக்க பாலம் இருக்கிறது. ஆனால் நேரமாகும். எனவே ஓட்டுநர் பொறுமையை இழந்து காரை நதியின் ஒரு கரையில் இறக்கி மறுகரையில் பத்திரமாக கொண்டு வந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டானது. பலரும் இந்த காரின் செயல் திறனையும், ஓட்டுநரின் திறமையையும் பாராட்டினர்.
ஆனால், இமாச்சலப் பிரதேச காவல்துறை இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து ஓட்டுநருக்கு அபராதம் விதித்திருக்கிறது. இது குறித்து அம்மாநில போலீஸ் அதிகாரி எஸ்பி மயங்க் சவுத்ரி கூறுகையில், "லாஹவுல் ஸ்பிட்டி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். ஆற்றின் சூழலை பாதிக்கும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மட்டுமல்லாது மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் கீழ் இப்படி ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது குற்றமாகும். எனவே ஒட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது இனி வரும் காலங்களின் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார். தார் காரை ஆற்றில் இறங்கியதற்கு போலீசார் அபராதம் விதித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications