அட கொடுமையே.. நண்பன் வீட்டு நிகழ்ச்சிக்கு போன இடத்தில்.. நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு நடந்த சோகம்
நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நண்பனின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற போது வெள்ளநீர் கால்வாயில் உள்ள தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்த சோசக சம்பவம் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம். இதேபோல் திருச்சியில் ஆற்றில் குளிக்க சென்ற தந்தை - மகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கொங்காந்தான் பாறை அருகே உள்ள காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் ஆண்ட்ரூஸ். 17-வயதான இவர் பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது நண்பர் அருண்குமார் (வயது 18), நிக்கில் (வயது 17) ஆகியோரும் ஒன்றாக படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தங்களுடன் படித்து வரும் சக மாணவரின் வீடு பால் காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெற்றது. நண்பர் வீட்டு விஷேசம் என்பதால் இந்த மூன்று மாணவர்களும் மேலும் மூன்று மாணவர்களும் சேர்ந்து முன்னீர்பள்ளத்தை அடுத்துள்ள மேலதிடியூர் வடுவூர்பட்டிக்கு சென்றனர். புதுமனை புகு விழா முடிந்த பிறகு நண்பர்கள் 6 பேரும் அங்கு சாப்பிட்டு விட்டு,
அப்பகுதியில் உள்ள வெள்ளங்குழியில் இருந்து வெள்ளநீர் கால்வாயில் குளிக்க சென்றுள்ளனர்.
6 பேரும் வெள்ளநீர் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருண்குமார், ஆண்ட்ரூஸ் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். எதிர்பராத விதமாக தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்த நிக்கில் அவர்களை காப்பாற்ற சென்றார். ஆனால் மூன்று பேரும் நீரில் சிக்கிக் கொண்டனர். இதை பார்த்த நண்பர்கள், 3 பேர் சத்தம் போட்டுள்ளனர். அங்கு இருந்தவர்கள் உடனடியாக ஒடி வந்து நீரில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.
உடனடியாக தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீ அணைப்பு படை வீரர்கள், நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவர்கள் அருண்குமார், ஆண்ட்ரூஸ், நிக்கில் ஆகிய 3 பேரது உடல்களையும் மீட்டனர். பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெள்ள நீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருச்சியில் சோகம்: இதேபோன்று திருச்சி அருகே திருவெம்பூரில் காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது தந்தை மகள் இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் அருகே காவிரி ஆற்றில் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷ் என்பவர் குளிக்க சென்றார். அவருடன் 8 வயது மகள் ரியா மற்றும் இன்னொரு மகள் சென்றிருந்தார். 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென 3 பேரும் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து 3 பேரும் தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் தத்தளித்தனர். மேலும் உதவிக்கேட்டு அபயக்குரல் எழுப்பினர். இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீட்க முயன்றனர். எனினும் சுரேஷின் 8 வயது மகள் ரியா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். இதற்கிடையே தீயணைப்பு துறையினருக்கும் இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்களும் ஆற்றில் இறங்கி தேடினர். இதில் சுரேசின் மற்றொரு மகள் பிணமாக மீட்கப்பட்டார். சுரேஷை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீவரமாக தேடி வருகிறார்கள். குளிக்க சென்ற இடத்தில் தந்தை மகள் இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications