நெல்லையில் தாமிரபரணி வரலாற்றுச் சுவடுகளை மறைத்து போஸ்டர்கள்.. தவெகவினர் செயலால் சர்ச்சை
நெல்லை: நெல்லை தாமிரபரணி நதியின் வரலாறு மற்றும் விழிப்புணர்வு தகவல்கள் இடம்பெற்றிருந்த சுவர்களை மறைக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெகவினரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக நிதி அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் இன்று நெல்லைக்கு வருகை தந்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அமைச்சரின் வருகையை முன்னிட்டு, நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

வாசகங்களை முழுமையாக மறைக்கும் வகையில்
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே தாமிரபரணி ஆறு ஓடுகிறது. இந்த நதியின் வரலாறு, அதன் சிறப்பு மற்றும் ஆற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆற்றங்கரையோர தடுப்புச் சுவர்களில் பல்வேறு தகவல்கள் மற்றும் வாசகங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எழுதப்பட்டிருந்தன.
இந்நிலையில், அமைச்சர் வருகையை முன்னிட்டு தவெக நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டர்கள், அந்த வரலாற்றுத் தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்களை முழுமையாக மறைக்கும் வகையில் ஒட்டப்பட்டிருந்தன. தடுப்புச் சுவரின் பெரும்பகுதியை போஸ்டர்கள் ஆக்கிரமித்துள்ளதால், பொதுமக்களுக்கு பயன்படும் தகவல்கள் தற்போது காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தி
தாமிரபரணி நதியின் பெருமை மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை மறைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுச் சொத்துகளிலும், விழிப்புணர்வு சுவர்களிலும் அரசியல் போஸ்டர்கள் ஒட்டப்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications