பஸ் ஸ்டாண்டில் மனைவி.. அழைக்க சென்ற கணவருக்கு நொடியில் துயரம்.. நெல்லையில் துடிதுடித்த உயிர்கள்
நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த மனைவியை அழைத்து வருவதற்காக வந்த நபர் சாலையில் நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிளில் மோதி விபத்தில் சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த பெண்ணும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக விபத்து சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. விபத்துகளுக்கு பெரும்பாலும் போக்குவரத்து விதிமீறல்களே காரணமாக உள்ளது. அதிவேகம், சாலை விதிகளை மதிக்காமல் வண்டியை ஓட்டுவது, அவசியமற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்தல் என பல்வேறு காரணங்கள் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.

விபத்தை கட்டுப்படுத்த போலீசார், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும், விபத்துகள் குறைந்தபாடில்லை. சாலையில் ஒரு நொடி கவனக்குறைவால் குடும்பமே நிலை குலையும் அளவுக்கு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
அப்படியான ஒரு நிகழ்வுதான் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நடைபெற்றுள்ளது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த விபத்து குறித்த சம்பவங்களை பார்க்கலாம். நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள விஜயஅச்சம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். 28 வயதான கண்ணன் மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி அனுசியா வள்ளியூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று மாலையில் பள்ளியில் இருந்து அனுசியா பஸ்சில் வந்து இறங்கி மன்னார்புரம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அவரை அழைத்து செல்வதற்காக கண்ணன் திசையன்விளையில் இருந்து மன்னார்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
குமாரபுரம் ஊர் அருகே வரும்போது ஒரு வளைவில் அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மனைவி வள்ளியம்மாள் (55) என்பவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் மீது கண்ணன் ஓட்டி வந்த பைக் அசுர வேகத்தில் மோதியது. இந்த பயங்கர விபத்தில் படுகாயம் அடைந்து தூக்கி வீசப்பட்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வள்ளியம்மாள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வள்ளியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் செல்லும் வழியிலேயே அவரும் இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications