தேரிக்காடு! சிவப்பு கம்பளம் விரித்தாற் போல் மணல் மேடு! தமிழகத்தின் ஒரே பாலைவனம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தேரிக்காடு பகுதிதான் தமிழகத்தின் ஒரே சிவப்பு மணல் மேடு கொண்ட பாலைவனமாகும்.
ஒவ்வொரு நிலப்பரப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அந்தந்த மண்ணின் வளத்திற்கேற்ப விவசாயம் செய்யப்படும். அந்த விவசாயத்திலும் எந்த மாதிரியான பயிரை வைக்கலாம் என்பதை முடிவு செய்வதும் அந்த பகுதியின் கால நிலை மட்டுமல்லாமல் மண்ணின் வளமும்தான்!

அந்த வகையில் தமிழகத்தில் எங்குமே இல்லாத அளவுக்கு சிவப்பு நிற மண் மேடு தூத்துக்குடி மாவட்டம் தேரிக்காட்டில் உள்ளது. இந்த பகுதியில் நிறைய அய்யனார் கோயில்கள் உள்ளன.
அய்யனாரின் பூமி என்றும் அழைக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டு அதன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தாமிரபரணி மற்றும் கரும்நெய்யாறு ஆற்று படுகை இடையே இந்த தேரிக்காடு உள்ளது. இந்த பகுதிகள் எல்லாம் சமீப காலங்களாக, சட்டவிரோத மணல் திருட்டால் இயற்கை வளத்தை இழந்து வருவதாகவும், கூறப்படுகிறது.
இதை காப்புக் காடாக தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இது ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட இடம் என கூறுகிறார்கள். எப்போதாவது மணல் திட்டுக்கள் உள்ள இடத்தில் மரம் நடுவது நடக்கும். மற்றபடி பொதுமக்கள் அங்குள்ள கோயில்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்கிறார்கள்.
மன்னார் வளைகுடாவை நோக்கி தெற்கு தென் கிழக்காக சரிந்த நிலையில் இந்த தேரிக்காடு காணப்படுகிறது. இதன் பரப்பளவு சுமார் 11 ஆயிரம் ஏக்கர் என கூறப்படுகிறது. இங்கு முந்திரி செடிகள் செழித்து வளரும். முந்திரி மரங்கள் செம்மண்ணை அதிகம் விரும்பக் கூடியது. காற்று அதிகமாக வீசும் போது மணல் குவிந்து பெரிய மேடு போல் மாறிவிடுகிறது. இங்கு காணப்படும் சிவப்பு நிற மணல் எப்படி தோன்றியது என உறுதியாக தெரியவில்லை. ஆனால் நிலவியல் அமைப்புதான் இதற்கு காரணம் என்கிறார்கள். இது தாமிரபரணி ஆற்று மணல் கிடையாது, கடல் மண்ணும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே வேறு எங்கும் இல்லாமல் இங்கும் மட்டும் எப்படி பரவி கிடக்கிறது என்பதற்கு இதுவரை விடைகள் இல்லை. இது 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என சொல்லப்படுகிறது. அதேநேரம், நெல்லை மாவட்டம் குட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் செம்மண் மேடுகள் அதிகம் உள்ளன. ஆனால் அவை தேரி கிடையாது. இறுக்கமாக இருக்க கூடியவை. அங்கும் முந்திரி தோட்டங்கள் அதிகம். ஆனால் தேரிக்காட்டில் மணல் தேரி போலவே உள்ளது.
இந்த தேரிக்காட்டில் மழைக்காலத்திற்கு பிறகு வெல்வட் பூச்சிகள் அதிகம் வருகை தருமாம். தேரிக்காட்டில் ஒரு சுனையில் கோடைக் காலத்தில் கூட சுவையான தண்ணீர் கிடைப்பதாக கூறுகிறார்கள். தேரிக்காட்டிலுள்ள கற்குவேல் அய்யனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தேரிக்காட்டுக்கு அருகில் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் உள்ளது. அந்த கோவிலும் மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த இரு கோவில்களிலுமே, முறையே, சிங்கம் 1, தாமிரபரணி உள்ளிட்ட திரைப்படங்கள் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications