ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு ஒரே நாளில் இரண்டு நல்ல விஷயம்.. ஐகோர்ட் போட்ட உத்தரவுகள்
சென்னை: வனம், வன விலங்குகள் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த அமர்வு நேற்று இரண்டு முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி ஊட்டி, கொடைக்கானலில் செயல்படும் சட்டவிரோத தங்கும் விடுதிகளை இழுத்து மூட வேண்டும் என்று கூறியதுடன் இதற்காக அதிகாரிகள் கொண்ட குழுவை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. இரண்டு விஷயங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
ஊட்டி, கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிக அளவு சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் உள்ளூர் மக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறையை கட்டாயமாக்கி உத்தரவிட்டார்கள்.

அதன்படி ஊட்டிக்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான வாரநாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (வார இறுதி நாட்களில்) 8 ஆயிரம் வாகனங்களுக்கும், கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும் மட்டுமே இ-பாஸ் வழங்கி அனுமதிக்கப்பட்டு வருகிறது.
வியாபாரிகள் போராட்டம்
இந்த நடைமுறைக்கு உள்ளூர் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், தங்களது வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதாக அவர்கள் அரசிடம் முறையிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலி காட்சி வாயிலாக ஆஜரான நீலகிரி கூடுதல் கலெக்டர், கோடை காலத்தில் ஊட்டியில் மலர், பழம், காய்கறி, ரோஜா கண்காட்சிகள் நடைபெறும். அதனால், சுற்றுலா வாகனங்களுக்கு கூடுதல் அனுமதி வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.
சட்டவிரோத விடுதிகள்
அதேநேரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் நேற்று வழக்கில் முக்கியமான இன்னொரு விஷயத்திலும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி ஊட்டி, கொடைக்கானலில் செயல்படும் சட்டவிரோத தங்கும் விடுதிகளை இழுத்து மூடவேண்டும் என்று கூறியதுடன் இதற்காக அதிகாரிகள் கொண்ட குழுவை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது.
கூடுதல் கட்டணம்
முன்னதாக ஊட்டி, கொடைக்கானல்களில் உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக தங்கும் விடுதிகள் செயல்படுகின்றன என்றும் அந்த விடுதிகளில் தங்க சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு மோசடி செய்யப்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்ட்டது.
சிறப்பு குழு அமைப்பு
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் நீதிபதிகள் கூறும் போது, "ஊட்டி, கொடைக்கானல்களில் எத்தனை தங்கும் விடுதிகள் உள்ளன? அதில் எத்தனை விடுதிகள் முறையான அனுமதி பெற்றுள்ளன? அனுமதியின்றி செயல்படும் விடுதிகள் எத்தனை? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி, உள்ளூர் நகராட்சி கமிஷனர், மாவட்ட சுற்றுலா அதிகாரி ஆகியோர் கொண்ட குழுவை அமைக்கிறோம்.
தங்கும் விடுதிகள்
இந்த அதிகாரிகள் கொண்ட குழு, ஆய்வுகளை மேற்கொண்டு சட்டவிரோதமாக செயல்படும் விடுதிகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும். அதுமட்டுமல்ல, இதுபோன்ற சுற்றுலா ஊர்களில் சட்டவிரோதமாக செயல்படும், அதிக கட்டணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகள் குறித்து பொதுமக்கள் எளிதாக புகார் செய்யும் விதமாக பிரத்யேக தொலைபேசி எண்களையும், இணையதள வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.
மக்களுக்கு பாதிப்பு
தங்கும் விடுதிகள் இஷ்டம்போல அதிக கட்டணங்கள் வசூலிப்பதால், ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறிய நீதிபதிகள். அதிக கட்டணம் வசூலிப்பதால் பெரும்பாலான நடுத்தர குடும்பத்தினரால் அங்கு வர முடியவில்லை என்றார்கள். இங்குள்ள தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்யவேண்டும் என்றும் இந்த அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து, அது குறித்த அறிக்கையை வருகிற ஜூன் 20-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும்'' என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications