'போலீஸ் மேலயே கைய வைக்கிற'.. குற்றாலத்தில் குடிமகன்கள் தெனாவட்டு.. கடைசியில் பாட்டு தான் சம்பவமே
தென்காசி: குற்றாலத்தில் முழு போதையில் குடித்துவிட்டு தெனவாட்டாக போலீஸ் மீதே கைவைத்த இளைஞர் கடைசியில் மன்னிப்பு கேட்டார். இரண்டாவது சம்பவமாக மெயின் அருவிக்கு செல்லும் வழியில் "கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி" என பாட்டு போட்டு ஒரு கும்பல் போலீஸ் முன்பே மது அருந்தி அட்டகாசம் செய்தது.
குற்றாலம் சீசன் களைகட்ட தொடங்கி உள்ள நிலையில் ஏராளமானோர் குளிக்க வருகிறார்கள். அதேநேரம் குடியுடன் குளித்து ஆனந்தம் அடைய வருவதால், குடிமகன்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகமாக உள்ளது. லாட்ஜில் நன்றாக மூக்கு முட்ட குடித்துவிட்டு, அப்படியே ஆனந்த குளியல் போட வருபவர்கள் மிக அதிகம். அதேநேரம் இப்படி குடி, குளியல், குடி குளியல் ரிபீட்டு என்று இருக்கும் இவர்கள், சில நேரங்களில் குடிபோதையில் அட்டகாசம் செய்வதும் நடக்கிறது.

அப்படித்தான் குற்றலாம் அருவியில் குளித்த குடிமகன்கள் கடைசியில் போலீசாரிடம் வம்பிழுத்து வசமாக சிக்கியுள்ளனர். அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் ஒரு குடிமகன் போலீஸ் என்று தெரியாமல் சட்டையை பிடித்து அடிக்க போயிருக்கிறார். கடைசியில் போலீஸ் மேலேயே கைய வைக்கிற,.. "என்னலே என்ன பெரிய வீரன்னு நெனப்பால".. என்று ரவுண்டு கட்டினார்கள்.
தெனாவட்டாக சுற்றிய இளைஞர் உள்பட அங்கிருந்தவர்களை போலீசார் கேள்விகளால் துளைத்தனர். இதையடுத்து வம்பிழுத்த குடிமகன்கள் கடைசியில் மன்னிப்பு கேட்டனர். போலீஸ் என்று எங்களுக்கு தெரியாது என்று கெஞ்சி மறுத்தனர். அப்போது போலீசார் ஒரு குடிமகனிடம்.. குற்றலாத்திற்கு வந்தால் குளிக்க தானே செய்ய வேண்டும்.. இவ்வளவு போதை எதற்கு,. என்ன படிக்கிறாய் என்று கேட்ட போது, மாடு மேய்கிறேன் என்று அந்த இளைஞர் கூறினார். அப்போது போலீசார், அப்படியே இரு, அதுதான் மேய்ப்பாய் என்று கூறினார்கள். தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர் உள்பட இரண்டு பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அதனை தொடர்ந்து அங்கிருந்து சென்ற காவலர்கள் அருவிக்கு செல்லும் வழியில் பார்த்த போது, நடு ரோட்டில் “கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி” என பாட்டு போட்டு ஆட்டம் போட்டபடி குடித்துக் கொண்டிருந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த இளைஞர்களை பார்த்து அதிர்ந்தனர்.
போலீஸ் முன்னிலையிலேயே கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி என்று ஸ்பீக்கரில் பாடிக்கொண்டிருந்தனர். கையில் கிளாஸில் மது இருந்தது. இதை பார்த்த போலீசார் அவர்களின் கையில் இருந்த மதுவை குப்பையில் கொட்ட வைத்தனர். தொடர்ந்து அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதால், ஏராளமான ஆண்கள் , பெண்கள் குடும்பத்துடன் வந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த சூழலில் குளிக்க, குடிக்க, குளிக்க குடிக்க என்று ரிப்பீட் மோடில் வரும் இளைஞர்களை போலீசார் சிறப்பாக கவனித்தால் இதுபோன்று குடிமகன்களின் அட்டகாசம் இருக்காது என்கிறார்கள் சுற்றுலா பயணிகள்.












Click it and Unblock the Notifications