கேப் விட்டது மழை.. ஆனா நாளை காலை வரை ஓயாது.. சென்னையில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ மழை பதிவு!
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இரவு நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். சென்னையின் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வியாழக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும், என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும், இரவு நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக, பணி முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். சென்னையில் ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர், தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி, அசோக்நகர், கிண்டி, தி.நகர், மீனம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம், பாரிமுனை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக, சென்னையில் உள்ள 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதிகமான நீர்தேங்கிய காரணத்தால், பெரம்பூர் ஹைவே சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, தாம்பரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன. தற்போது மழைநீர் வடிந்து வருவதால் போக்குவரத்து சீரடைந்து வருகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் இரவில் கடந்த 3 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழையால், சுமார் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையின் 5 இடங்களில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சென்னையில் மழை ஓய்ந்துள்ள நிலையில், இன்று இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications