கேப் விடாமல் விளாச போகுது மழை.. அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்- வானிலை மையம்
சென்னை: இந்தாண்டு தமிழ்நாட்டில் கோடை வெயில் ஏற்படுத்தும் தாக்கம் முந்தைய ஆண்டுகள் அளவுக்கு மோசமானதாக இல்லை. அவ்வப்போது மாநிலத்தில் பரவலாகப் பெய்யும் மழையே இதற்குப் பிரதானக் காரணமாகும். இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதம் வெப்பம் படுத்தி எடுக்கும். அதிலும் குறிப்பாக மே மாதம் வெப்பம் உச்சத்தில் இருக்கும். கடந்தாண்டு எல்லாம் மே மாதம் மதிய நேரம் வெளியே வர வேண்டாம் எனச் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

26 மாவட்டங்களில் மழை
இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெப்பம் அதிகரித்தது. பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. ஆனால், மே மாதம் நிலைமை மாறிவிட்டது. அக்னி நட்சத்திரம் காரணமாக வெப்பம் அதிகரிக்கும் எனப் பலரும் கருதினர். மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில் வெப்பம் அதிகமாக உள்ள போதிலும், பரவலாகப் பெய்யும் மழையால் வெப்பம் குறைந்தே காணப்படுகிறது. இதனால் முந்தைய ஆண்டுகள் அளவுக்கு வெப்பம் அதீதமாக இருப்பதில்லை. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் மழை
அதாவது இரவு 7 மணி வரை கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல திருவள்ளூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடியே லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழை காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் இதனால் டிராபிக் பாதிப்பும் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் வீக் எண்ட் என்று இன்று மாலை எதாவது பிளான் செய்திருந்தால்.. இந்த அலர்ட்டிற்கு ஏற்ப தங்கள் திட்டங்களைப் போட்டுக் கொள்ளுங்கள்.
வானிலை மையம்
முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.
இன்றைய தினம் (மே 10) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் மே 12ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை கொட்டும்
மே 13ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (மே 10 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications