குடை ரெடியா? காலை 10 மணி வரை சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! உங்கள் ஊர் இருக்கா?
சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடும் ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன்படி இன்று காலை 10 மணிக்குள் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் மாதம் 1 மற்றும் 2 ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
அதோடு இன்று சென்னையை பொறுத்தமட்டில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தமட்டில் 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications