அடுத்த 3 மணி நேரத்தில் மழை.. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் கொட்ட போகுது.. வானிலை மையம்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்த முன்னெச்சரிக்கைகளை ஒரு நாள் முன்பாகவும், சில நாட்கள் முன்பாகவும் வெளியிடும். அதேநேரம் வெறும் 3 மணி நேரத்திற்கு முன்பு மேகங்கள் கூடியதை வைத்து சரியாக கணித்து மழை குறித்த எச்சரிக்கைகளை உடனுக்குடன் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியிருக்கிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் பெரிதாக மழை இல்லை.. சிறிய அளவிலேயே சாரல் மழை பெய்தது. அதேநேரம் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றைய மழைக்கான அறிவிப்பினை நேற்று வெளியிட்டிருந்தது. அதன்படி, "மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி 2 நாட்களில் நகரக்கூடும்.
இதனால் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் 'ஆரஞ்சு' எச்சரிக்கை நிர்வாக ரீதியாக விடுக்கப்படுகிறது.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை (சனிக் கிழமை) முதல் 24-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications