சென்னையில் மழை.. அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த ஏரியாவில் மழை நீடிக்கும்? வானிலை அப்டேட் இதோ
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது மே மாதம் இறுதியிலும், ஜூன் மாதம் 1ம் தேதியும் தொடங்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததைவிட ஒரு வாரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த மழையால் முதலில் பயன்பெறும் மாநிலம் கேரளம்தான். அதன் பின்னர்தான் தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும்.

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்ததால் பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 90 சதவிகிதமும், அதற்கு முன்னர் ஜூன் மாதத்திலும் பருவமழை 65 சதவிகிதம் என மொத்தமாக இந்த முறை பருவமழை 45 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதேபோல கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவிலும் பருவமழை குறைந்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான நீர் வரத்து குறைந்தது.
இருப்பினும் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியிருந்தது. அதேபோல இந்த மாதம் தொடக்கம் முதல் பருவமழையின் அளவு அதிகமாக இருந்தது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் பரவலான இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அமைந்தக்கரை, அயனாவரம், எழும்பூர், பெரம்பூர், புரசை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. புறநகரை பொறுத்த அளவில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது" என்று கூறியுள்ளது. தற்போது சென்னையின் அண்ணாநகர், கோயம்பேடு, வில்லிவாக்கம், பாடி, அயனாவரம், கொளத்தூர், ரெட்டேரி, மாதாவரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications