அடுத்த 2 மணி நேரத்திற்கு.. சென்னை டூ குமரி வரை.. 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகுது மழை!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை முதல் குமரி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, தேனி, கோவை உள்ளிட்ட மாவடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த சில நாட்களாகவே மாலை நேரம் வந்தாலே மழை வந்துவிடுவது தொடர்கதையாக இருக்கும் நிலையில் இன்று மாலையிலும் மழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் கனமழை பெய்தது. அதன்பிறகு கடந்த 3 நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை. லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது.

மாலை வேளையில் கொட்டும் மழை
சென்னை உள்பட வட கிழக்கு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று மதுரையிலும் வெயில் சுட்டெரித்தது. மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி வெயில் பதிவானது. வெயில் ஒருபுறம் வெளுத்து எடுத்தாலும், வெப்பச் சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. அப்படித்தான் கடந்த சில நாட்களாகவே மாலை நேரம் வந்துவிட்டாலே கூடவே மழையும் வந்துவிடுகிறது.
நேற்றும் தமிழகத்தில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், சென்னை, புதுவை, தென்காசி உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பகலில் வெயிலால் தகித்த தலைநகர் இரவு ஜில்லென மாறியது.
12 மாவட்டங்களுக்கு அலர்ட்
இந்த நிலையில் தான் இன்று மாலையிலும் சென்னை முதல் குமரி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நெல்லை, தென்காசி, தேனி, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், இதேபோன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 ஆம் தேதி வரை மழை இருக்கு
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஓர் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று திங்கட்கிழமை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமையில் இருந்து வரும் 29 ஆம் தேதி வரை தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications