அடுத்த 2 மணி நேரம்.. நெல்லை, தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் ஒரு வாரமாக பெரிதாக மழை இல்லாமல் இருந்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் இருக்கிறது. எனினும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தமிழக பகுதிகள் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது.

இதேபோல் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என்றும், குளிர் வாட்டி வதைக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படியே தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக குளிர் வாட்டி வதைத்து வருகிறது. மதிய நேரங்களில் மட்டும் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;- தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 1 மணி வரை நெல்லை, தென்காசி மற்றும் குமரி ஆகிய 3 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த ஒரு வாரத்திற்கான அப்டேடில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நாளை 8 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மறுநாள் 9 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 10 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11 ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 12 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, இன்று (07-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications