டிட்வா புயல்.. திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ரெட் அலர்ட்.. சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை: டிட்வா புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இன்று திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை உட்பட காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகே தென்மேற்கு வடங்கக்கடல் பகுதிகளை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிட்வா புயல் கரையை கடக்காமல், கரையை தொட்டபடியே பயணிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று வட தமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
210 மிமீக்கும் அதிக மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிபலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதால், மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் டிட்வா புயல் கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டிருந்தபடியே படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாளை முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications