கியரை மாற்றிய பெஞ்சல் புயல்.. வேகம் கூடுது! தற்போது புயல் எந்த இடத்தில் இருக்கு? லேட்டஸ்ட் அப்டேட்!
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல் ஃபெஞ்சல் (Fengal) புயலாக உருமாறி வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் (ஃபெங்கல்) புயல் சென்னையில் இருந்து, 110 கி.மீ தொலைவில் உள்ளது. பெஞ்சல் புயல் இன்று மாலை புதுச்சேரிக்கு அருகே காரைக்கால் - மாமல்லபுரம் இடையே இன்று கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

ஃபெஞ்சல் (ஃபெங்கல்) புயல் இன்று காலை வரை 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதன் வேகம் சற்று அதிகரித்து, 12 கி.மீ/ மணி என்ற வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்நிலையில், மீண்டும் புயலின் வேகம் 13 கி.மீ/ மணி என அதிகரித்து உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது, சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் தான் வேகம் சற்று அதிகரித்து 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
எனினும், முன்னதாக இன்று பிற்பகலில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியான வானிலை தகவலின்படி இன்று மாலை தான் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே உள்ள கடற்கரை பகுதியில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என கூறப்படுகிறது. இருந்தும் காற்றின் வேகத்தைப் பொறுத்து புயலின் திசையில் மாறுபாடு ஏற்பட்டு கரையை கடக்கும் இடமானது சென்னையை நெருங்கலாம் என்று தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று இரவு முதல் அதிகாலை வரை ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என்றும், சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே மரக்காணம் முதல் மாமல்லபுரம் வரை எங்காவது புயல் கரையைக் கடக்கும் என்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அந்த சமயம் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலால் சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர் உள்ளிட்ட பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications