இதுவரை ஆபத்தான செய்திகள் வரவில்லை.. இரவு கனமழை பெய்யும் என்பதால் பணிகள் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: இன்று இரவு கடுமையான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காரணத்தால் முழுமையான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். அமைச்சர்கள் நிவாரண மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஆபத்தான செய்திகள் எதுவும் வரவில்லை. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல் ஃபெஞ்சல் (Fengal) புயலாக உருமாறி வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

ஃபெஞ்சல் (ஃபெங்கல்) புயலின் தாக்கம் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அவசரகால பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து, மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக கலந்துரையாடினார். அப்போது முதல்வர் ஸ்யாலின், புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அறிவுறுத்தல்களை பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், "தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு இது குறித்து ஆய்வு நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு கடுமையான மழை பெய்து இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று இரவு புயல் கரையைக் கடக்கும் என்று செய்தி வந்திருக்கிறது. இந்த நிலையில் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் சென்னை மாநகர ஆணையர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களைத் தொடர்பு கொண்டு அங்கு உள்ள நிலவரங்களை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.
நிவாரண பணிகள் எந்த அளவிற்கு உள்ளது எனத் தெரிந்து கொண்டிருக்கிறோம். நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இன்று இரவு நிச்சயமாக கடுமையான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காரணத்தால் முழுமையான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் அந்தந்த மாவட்டத்திற்கு உரிய பொறுப்பு அமைச்சர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஆபத்தான செய்திகள் எதுவும் வரவில்லை. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
சென்னை தியாகராய நகரில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கவில்லை. இப்போது அந்தப் பகுதிகளில் தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. சென்னையில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்குமோ, அந்த இடங்களில் எல்லாம் நாங்கள் முன்கூட்டியே, மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட காரணத்தால், இப்போதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிப்போம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications