சென்னைக்கு "பேய்" மழை கொடுத்த மிக்ஜாம் புயல் தீவிர புயலாகவே கரையை கடந்தது! எப்போது வலுவிழக்கும்?
சென்னை: தலைநகர் சென்னையைப் புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் தீவிர புயலாகவே ஆந்திர மாநிலம் அருகே கரையைக் கடந்தது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று சென்னையில் அதி தீவிர கனமழையைக் கொடுத்தது. இந்த மழையால் சென்னையை முழுக்க மிதக்கும் சூழல் ஏற்பட்டது. நேற்று கிட்டதட்ட அனைத்து இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியது.

கனமழை கொட்டி தீர்த்த நிலையில், பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே கூட வர முடியாத மோசமான நிலை ஏற்பட்டிருந்தது.
மிக் ஜாம் புயல்: அதாவது நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா- வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்' தீவிர புயல்' வடக்கு திசையில் நகர்ந்து இன்று (05-12-2023) காலை 0830 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் காவாலிக்கு (ஆந்திரா) வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், கொண்டுள்ளது.
இந்த மிக்ஜாம் நேற்றைய தினம் தீவிர புயலாக வலுப்பெற்றிருந்தது. இதன் காரணமாகவே சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து, முக்கிய சாலைகளிலும் நீர் தேங்கியது. கடலும் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்தப் புயல் நள்ளிரவு மெல்லச் சென்னையை விட்டு விலகிச் சென்ற நிலையில், மழை குறைந்தது. இதற்கிடையே இந்தப் புயல் இன்று கரையைக் கடந்துள்ளது.
கரையைக் கடந்தது: சென்னையில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் ஆந்திராவின் பாபட்லா அருகே கரையைக் கடந்தது. பகல் 12.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிக்குள் தீவிர புயலாகக் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. மிக்ஜாம் புயல் கரையைக் கடந்த நிலையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கரையைக் கடந்த புயல் அடுத்த 2 மணி நேரத்தில் வலுவிழக்கும். தொடர்ந்து வடக்கு நோக்கி நகரும் புயல் படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் நேற்றைய தினம் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் நல்ல மழையைக் கொடுத்த நிலையில், இன்று ஆந்திர பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இப்போது அந்த புயல் வலுவிழந்து இருக்கும் நிலையில், ஆந்திர பகுதிகளிலும் மெல்ல மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை: முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதை விளக்கி செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தது. அதில், "நாளை முதல் வரும் டிச. 7 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச. 8ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச. 9ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications